கவிஞர் கருணானந்தம்
407
சட்டத்தை மீறுகிறவர்கள் யாராயிருந்தாலும், ஒன்று போல் சமமாக நடத்தப்படுவார்கள் என்று காட்டிக் கொண்டதற்காகப் பாராட்டுகிறேன் - என்று பெரியார் நவம்பர் 24-ம் நாள் “விடுதலை”யில் எழுதினார்.
காமராசரைத் தாக்க முயன்ற சங்கராச்சாரிக் கூட்டத்தைக் கண்டித்து, நாடெங்கும் கண்டன நாள் நடத்திப் பிரச்சினையைப் பெரிதாக்க முதலில் எண்ணிய பெரியார், இந்த ஒரு சங்கராச்சாரி என்ற தனிப்பட்ட மனிதரைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி, நாம் ஏன் ஆயிரக்கணக்கில் சிறை சென்று, நமது தோழர்களின் சக்தியை விரயமாக்க வேண்டும், என்று சிந்தித்துக், கருத்தினை மாற்றிக் கொண்டார். “தேர்தல் நேரத்தில் எதிரிகள் இதைத் தங்களுக்குப் பலமாக எடுத்துக் கொள்வார்கள். ஆகையால், தோழர்களே! உங்கள் வேகத்தைத் தேர்தலில் காண்பியுங்கள்! தேர்தலுக்குப் பிறகு நமக்கு நம் வேலை நிறைய இருக்கிறது" என்றார் பெரியார்.
பார்ப்பனப் பத்திரிகை விளம்பரங்களும், சினிமாக் கவர்ச்சியும் கூட்டத்தைச் சேர்க்கலாம். ஆனால் கொள்கை அடிப்படையில் மக்களின் ஓட்டைச் சேர்க்க அவர்களால் முடியாது. இந்த முறையும் காமராஜரின் காங்கிரஸ்தான் தமிழ் நாட்டை ஆளும்-என்று திடமாக நம்பித், தம் பணியை முடுக்கிவிட்டார் பெரியார், 1966-ல்!