கவிஞர் கருணானந்தம்
411
1967 ஜனவரித் திங்களில் தேர்தல் வேலைகள் மிகுந்த முனைப்புடன் நடைபெற்றன. பெரியாரின் பிரச்சாரப் பணி தொய்வின்றி நடந்து வந்தது. முழுநம்பிக்கையோடு காங்கிரஸ், மீண்டும் தமிழக ஆட்சிப்பொறுப்பில் அமரலாம் என்று எண்ணி, வேலை செய்தது. எதிர்க்கட்சிகளுக்கு எல்லாவகையான தொல்லைகளும் தரப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது விருகம்பாக்கம் மாநாட்டை வரலாற்றுச் சிறப்புடையதாக நடத்தி முடிந்திருந்தது. “காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்கிறார். படுப்பது நிச்சயம். ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று அந்த மாநாட்டில் பேசினார் ராஜாஜி. “சைதாப்பேட்டைத் தொகுதியில் திருவாளர் பதினொருலட்சம் போட்டியிடுவார்” என்று அண்ணா, கலைஞரின் பெயரை அறிவித்தார். ம.பொ.சி. உதயசூரியன் சின்னத்திலேயே தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டார். அண்ணா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்ததால், தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணமோ நம்பிக்கையோ இல்லாமல்தான் போட்டியிடுவதாக, மாற்றாரை நினைக்கத் தூண்டிற்று அண்மையில் பக்தவத்சலம் ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் போதாது என்று, புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனை நடிகவேள் எம்.ஆர். ராதா கைத்துப்பாக்கியால்