பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

50


பழக்கவழக்கங்களில் தோய்ந்து, பிடிவாதமாக, மாற்றங்களுக்கு இடங்கொடுக்காமல், மற்றவைகளை ஓரளவு விட்டுக் கொடுத்தாலும், இன்னமும் தாலியணியும் பழக்கத்தைத் தாய்மார்கள் விடாப்பிடியாய்க் கையாண்டு வருகிறார்கள். தாலியே பெண்களுக்கு வேலி என்று, ஆண்கள் வேலிதாண்டுவதற்கு அனுமதியாகப், பழமொழி ஒன்றும் வழங்குவார்கள். கணவரிடம் மதிப்பு, மரியாதை குறைந்திடும் பெண்டிரும், தாலியிடம் குறைக்கமாட்டார்களே! புனிதம், தெய்வீகம், மங்கலம் இப்படியாக - மஞ்சள் மகிமை தாலிக்கு மிகவும் உண்டு!

இவ்வாறு போற்றிப் பாதுகாக்கப்படும் தாலியை வைத்து இராமசாமி, ஒரு சிறு விளையாட்டு நடத்தினார். இரவு நேரம். உல்லாச வேளை. சல்லாபம் நடக்கிறது. எல்லாமே இன்பமயம். தாலி எதற்கு இடையூறாக இந்த வேளையில் என்பதாகக் கொஞ்சிப் பேசிய இராமசாமி, தயங்கித் தடுத்த நாகம்மையாரை வஞ்சகமாய்ச் சரிக்கட்டி, அவருடைய தாலியைக் கழற்றித் தம் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். காலையில் மறந்தது போல், அதே சட்டையைப் போட்டுக் கொண்டு கடைக்கும் போய்விட்டார். உறங்கி எழுந்த பின், நினைவின்றி இருந்த அம்மையாருக்குத் தம் கணவர் வெளியிற் சென்ற பின்னரே, தாலியின் நினைவு எழுந்தது. திடுக்குற்றவராய், அக்கம்பக்கம் பார்த்துத் தமது புடைவை முன்தானையால், கழுத்தினை மூடி மறைத்துக்கொண்டார். எவ்வளவு நேரத்துக்கு இது இயலும்? தமது பதற்றத்தினாலேயே, வெறுமையான கழுத்தை வெளியே காட்டிக் கொண்டார். கேலியாகவும் கடுமையாகவும் மற்ற பெண்டிர், தாலி எங்கே என்று கேட்டபோது, அம்மையார் தாமே முந்திக்கொண்டு சமாதானம் கூறினார். “கணவர் நல்லபடியாக ஊரில் இருக்கும் போது, தாலி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? குடியா முழுகி விடும்?” என்றார். இனி என்ன? இராமசாமிக்கு இதிலும் வெற்றி!

துவக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழிமுறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார், அவையெல்லாம் தம் கணவருக்குப் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து, தாமே திருத்திக்கொண்டார். சமுதாயக் கொள்கைகளில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடை போட்டார். விருந்தோம்பலில் அவர்க்கு நிகரானவர் எவருமிலர். பிற்காலங்களில் தமது கணவர் நாட்டுத் தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்துத் தலைமைப் பொறுப்பேற்ற காலை, பெரிய சத்திரம்போல் விளங்கிய அவர் வீட்டில் வந்து தங்கி அன்னையாரின் அறுசுவை உண்டிகளை அருந்தி மகிழாதார் இல்லை! இந்தியாவிலேயே, முதன்முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறைவாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவர். கஸ்தூரிபாகாந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது