55
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
திரளான செல்வம், தெருவுக்கொரு மாளிகை, வளங்குன்றா வாணிபம், நன்செய் புன்செய் வேளாண்மை, இன்சொல் வாக்கினால் எழும்பிய செல்வாக்கு, ஆணை எதிர்நோக்கும் ஆள் அம்பு, நண்பர் குழாம், எந்நேரம் வந்தாலும் ஏன் தாமதம் எனக்கேளாமல் முன்னே ஓடி நின்று, முறுவலித்து, முகம் பார்த்து அகமகிழும், அன்பு தவழும் இல்லக் கிழத்தி - இந்த இராமசாமிக்கு என்ன குறை என்றுதான் எல்லாரும் பொறாமை மீதுறப் பார்த்து வந்தனர். ஆனால் எங்கோ எதிலோ குறை கண்டார் போலும்! தாயார் கடிந்துரைத்தனரோ, அல்லது தந்தையார் தட்டிக் கேட்டனரோ தெரியவில்லை.
இராமசாமியார் ஓர் நாள் ஊரைவிட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். நேரே சென்னை மாநகரம் வந்து சேர்ந்தார். தம்முடன் துணைக்கு இரண்டு மூன்று நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். அவர்களில் ஒருவர் பெயர் இராமசாமி நாயக்கர் என்னும் மாப்பிள்ளை நாயக்கர்.