பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
4. துறந்தார்
உறவை முறித்துத் துறவு - ஊர் சுற்றிச் சீர்பெற்றுப் பயணம் தொடங்கிய இடங்காண மடங்கி வந்தது - வணிகத் துறையில் மீண்டும் புகுதல் -1905 முதல் 1907 - ஆம் ஆண்டுவரை.


திரளான செல்வம், தெருவுக்கொரு மாளிகை, வளங்குன்றா வாணிபம், நன்செய் புன்செய் வேளாண்மை, இன்சொல் வாக்கினால் எழும்பிய செல்வாக்கு, ஆணை எதிர்நோக்கும் ஆள் அம்பு, நண்பர் குழாம், எந்நேரம் வந்தாலும் ஏன் தாமதம் எனக்கேளாமல் முன்னே ஓடி நின்று, முறுவலித்து, முகம் பார்த்து அகமகிழும், அன்பு தவழும் இல்லக் கிழத்தி - இந்த இராமசாமிக்கு என்ன குறை என்றுதான் எல்லாரும் பொறாமை மீதுறப் பார்த்து வந்தனர். ஆனால் எங்கோ எதிலோ குறை கண்டார் போலும்! தாயார் கடிந்துரைத்தனரோ, அல்லது தந்தையார் தட்டிக் கேட்டனரோ தெரியவில்லை.

இராமசாமியார் ஓர் நாள் ஊரைவிட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். நேரே சென்னை மாநகரம் வந்து சேர்ந்தார். தம்முடன் துணைக்கு இரண்டு மூன்று நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். அவர்களில் ஒருவர் பெயர் இராமசாமி நாயக்கர் என்னும் மாப்பிள்ளை நாயக்கர்.

ஆம்! இவர் எஸ். இராமசாமிநாயக்கர். வெங்கட்ட நாயக்கரின் மகள் கண்ணம்மாளின் கணவர். இவருக்கு மஞ்சள் மண்டி வணிகம். முதல் மனைவி கண்ணம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி பொன்னம்மாள் மூலமாக ராஜாத்தி என்கிற சுப்புலட்சுமி. காந்தி, சரோஜினி ஆகிய மூன்று பெண் மக்கள். சந்தானம், சாமி இரு ஆண்மக்கள். இவர்களைக் கண்ணம்மாளின் மக்கள் என்றே அனைவரும் கருதுவர். எஸ்.இராமசாமி நாயக்கர் 1951 ஆகஸ்ட் 5-ஆம் நாளும் எஸ்.ஆர் கண்ணம்மாள் 1971 பிப்ரவரி 23-ஆம் நாளும் மறைந்தனர். இந்த இராமசாமி நாயக்கரின் மக்கள் எஸ்.ஆர். சந்தானம், எஸ்.ஆர்.சாமி ஆகியோர் இன்று ஈரோட்டில் பிரமுகர்கள். மாப்பிள்ளை நாயக்கரின் மக்கள் என்று இவர்கள் அன்புடன் அழைக்கப்படுவார்கள்.