கவிஞர் கருணானந்தம்
56
சென்னை வரையில் வருவதற்குத்தான் மற்ற நண்பர்களுக்குத் தென்பும் திராணியும் இருந்தது. சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருக்குங்கால், யாரோ ஈரோட்டுக்காரர் அவ்வழியே செல்லக்கண்ட மாப்பிள்ளை நாயக்கர், தங்களைத்தான் தேடச்சொல்லி மாமனார் வெங்கட்ட நாயக்கர் அவர்களை அனுப்பியிருப்பதாக அஞ்சி, இராமசாமியை விட்டு அகன்று, உடன் வந்த மற்றவர்களுடன் ஈரோட்டுக்கே திரும்பிவிட்டார். இராமசாமி துறவு மேற்கொண்டு, சென்னையை விட்டு எங்கோ வடக்கே சென்றுவிட்டதாகவும் ஊரில் அவர் கூறினார்.
கவுதம புத்தருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தையும் தோன்றிய பின்னர், இல்லறத்தில் பற்று நீங்கித் துறவறத்தில் ஆர்வம் பிறந்ததுபோல், இராமசாமியாருக்கு 25 வயது பிறந்த பின்னர் குடும்ப பாசம் குறைந்தது. உறுதியாகத் துறவு நிலை பூணுவது என்று முடிவு செய்து கொண்டு சென்னையை விட்டுத் தனியே புறப்பட்டுப் போனார். ஆந்திரப் பகுதியிலுள்ள பெஜவாடாவை அடைந்தார். ஆங்கோர் சத்திரத்தில் தங்கியிருந்தார். இவரைப்போலவே ஏதோ மனக்குறையால், வீட்டாரிடம் வெறுப்புற்ற இருவர், இவருக்கு அங்கே உற்ற துணைவராயினர். ஒருவர், தஞ்சாவூரைச் சார்ந்த வட மொழிப் புலமை வாய்ந்த வெங்கட் ரமண அய்யர். இன்னொருவர், கோயமுத்தூரைச் சார்ந்த கிராம அதிகாரி கணபதி அய்யர்.
இந்த மூன்று இல்லற சந்நியாசிகளும் கூட்டுச் சேர்ந்துகொண்டு பெஜவாடாவை விட்டு, நிஜாம் மன்னரின் தலைநகரமான அய்தராபாத் போய்ச் சேர்ந்தார்கள். அங்கேயும் ஒரு சத்திரத்தில் தங்கிக்கொண்டு, காலையில் வெளியே கிளம்பி, உஞ்சவிருத்தி செய்து, கிடைக்கும் அரிசியை உணவாகத் தாமே சமைத்து உண்டு, சத்திரத்துத் திண்ணையில் அமர்ந்து தத்துவ விசாரணையில் ஈடுபடுவார்கள். அய்யர்கள் இருவரும் புராண இதிகாசக் கருத்துகளை எடுத்துப்பேச, இராமசாமியார் தமது இயல்பான தர்க்க வாதத்திறமையால், அவர்களை மறுத்தும் எதிர்த்தும் பேச, வீதியில் போவோர் வருவோர் பெருங்கூட்டமாய்த் திரள்வர்.