பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

580

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



கடவுள்களின் பிறப்பு பற்றி வழங்கப்படுகின்ற கதைகளைப் போன்ற ஆபாசக் குப்பை எங்குமே காண முடியாது.”

4-12-71 அன்று பாக்கிஸ்தான் அதிபர் யாஹ்யாகான் இந்தியா மீது போர்ப் பிரகடனம் செய்து விட்டார். அமெரிக்காவில் கண் மருத்துவம் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னர், கலைஞர் சிக்காகோ, நியூயார்க் முதலிய மாநகரங்கட்குச் சென்றுவிட்டு, 5-12-71-ல் சென்னை வந்து சேருவார் எனத் தகவல் கிடைத்தது. கண்ணின் இடப்புறம் இருந்த தொல்லை நீங்கி, மூக்கடைப்பும், தொண்டைக் கமறலும் அறவே அகன்று, தெளிவோடும் தென்போடும் வெண்கலக் குரலோடும், பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு வந்த கலைஞரைப், பெரியார், விமான நிலையத்தில் வரவேற்றார். அன்றே கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தான் கண்டனக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், தந்தை பெரியார், மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 55 கோடி மக்கள் மீதும் 6 கோடி மக்கள் போர் தொடுத்திடவா?" என்று முழங்கினார் பெரியார்.

முதல்வர் கலைஞர் நியூயார்க்கிலிருந்து தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று 3-12-71 "விடுதலை"யில் பிரசுரிக்கப்பட்டிருந்தது:-" அன்புமிக்க அய்யா பெரியார் அவர்கட்கு தங்கள் கருணாநிதி வணக்கம். இன்று நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு, அமெரிக்காவில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் (Thanks giving day) நன்றியறிவிப்பு நாள் விழாவில் நயாகரா கிளப் விருந்தினராக இருந்து விட்டு, நியூயார்க் செல்லும் வழியில் இந்த மடல் எழுதுகிறேன்.

தாங்களும் அம்மையாரும் வீரமணியும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களுக்குத் தேவைப்படும் ஓய்வுபற்றி நான் அதிகம் கூறவேண்டியதில்லை .

சிக்காகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் பிரிவில் அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்கு தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் தாம் தமிழகத்தில் நமது வளர்ச்சியை, சூரியனை மேகத்தால் மூட நினைப்பது போல், இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்களே தவிர, உலகின் பல்வேறு நாடுகளில் நமது பணியின் பயன்பற்றிப் பேசப்படுகிறது.

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் ஓயாத தொண்டு, தங்கள் காலத்திலேயே கொள்கைகள் பெற்றுவரும் வெற்றி குறித்தெல்லாம் குறிப்பிட்டேன்.