பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

579



பெரியாருக்கும் சேலம் வழக்கில் நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதி மன்றம் 18-11-7-ல் தீர்ப்பளித்தது. 28-ந் தேதி திராவிடர் மாணவர் கழகம் துவங்கப்பட்டது. பெரியார் 30-11-71 அன்று பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர்களும், புதிதாக மேயரான திருமதி காமாட்சி ஜெயராமனும், பெரியாரைச் சந்தித்து, விசாரித்தனர். சிகாகோவிலிருந்த முதல்வர் கலைஞரிடம் ஆசாரியர்களும், மாணாக்கர்களும் பெரியாரைப் பற்றியும் அன்னாரின் சமூகத் தொண்டு குறித்தும் நிரம்பக் கேட்டு விளக்கம் பெற்றதாக "விடுதலை"யில் செய்தி வந்தது. 1971 ஜூன் 7-ந் தேதி முதல், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சத வீதமும் பதவிகளைக் கணக்கிடுமாறு 2-12-71-ல் அரசாணை பிறப்பிக்கப்பெற்றது.

நமது கடவுள்களாக நாம் கருதிக் கொண்டிருக்கிற எல்லாமே காப்பியடிக்கப்பட்டவை; ஒரிஜினல் அல்ல என்ற பெரியாரின் ஆராய்ச்சிபூர்வக் கருத்துகள், ஆழ்ந்த சிந்தனைக்குரியவையாகும்: “கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது. தமிழிலும் கிடையாது. தமிழில் கடவுள் என்னும் இந்தச் சொல் தமிழனுக்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்குள் கற்பிக்கப்பட்ட சொல்லேயல்லாமல் பழங்காலச் சொல் என்று கூற முடியாது. இருக்கின்ற இலக்கியங்கள் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டனவேயாகும். தொல்காப்பியமும் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதேயாகும். அதுதான் தமிழனுக்கு ஆதி நூலாம்!

இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும், அவர்களது பிள்ளை குட்டிகளும் ஆரியக் கற்பனையே. ஆரிய வேதங்களில் அவர்களால் கொண்டு வரப்பட்டவையே என்பதல்லாமல், தமிழர்க்குரியதாக ஒன்றைக்கூடச் சொல்ல முடியவில்லை. சிவன், விஷ்ணு தமிழருடையதென்று சிலர் சொல்லிக் கொண்டபோதிலும், அவற்றின் இலக்கணம் வடமொழி முறையேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்களும், அவற்றின் கருத்துகளும் ஆரிய மொழியேயாகும். கடவுளர்க்கு ஆரியர் இட்ட பெயரனைத்தும், மேல்நாட்டுக் கடவுளர்க்கு இட்ட பெயர்களை அனுசரித்தே என்பதைப் பின்வரும் பட்டியல் மூலம் ஒப்பிட்டுக் காணலாம்:

சிவன், இந்திரன் - ஜுபிடர்; பிரம்மா - சாட்டர்னஸ்; எமன் - மைனாஸ்; வருணன் - நெப்டியூன்; சூரியன் - சோல்; சந்திரன் - லூனாஸ்; வாயு - சயோனஸ்; கணபதி - ஜூனஸ்; குபேரன் - புளூட்டஸ்; கிருஷ்ணன் - அப்போலோ; நாரதர் - மெர்க்குரி: இராமன் - பர்க்கஸ்; கந்தன் - மார்ஸ்; துர்க்கை - ஜூனோ ; சரஸ்வதி - மினர்வா; அரம்பை - வீனஸ்; உஷா - அரோரா,