பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பசியை ஆற்றிவிட்டுத், தான் சிறிது பசிக் கஷ்டத்தை அனுபவித்தாலுங் கூட ஒரு மனிதனின் பசியைப் போக்கினோம் என்று. ஒரு இன்பத் திருப்தி அடைவதில் சுயநலம் இல்லையா?

ஒரு மனிதன் ரயிலில் போகும் போது, மற்றொருவன் கதவைச் சாத்தியதில் இவன் விரல்கள் நசுங்கிவிடுகின்றன. இதைப் பார்த்த இன்னொருவன் மனம் பதறி, வேதனை அடைந்து, வேறு யாரும் முந்துவதற்குள், இவன் தனது ' வேட்டியைக் கிழித்து, நசுங்கிய விரல்களில் சுற்றித் தான் குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீரையெல்லாம் அதில் ஊற்றி, நனைத்துக் கட்டி விடுகிறான். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இவன் சொல்லிக் கொள்ளாமலே இறங்கித், தன் வழியே போகிறான். தன் வேட்டியின் கிழிசலைப் பார்க்கும் போதெல்லாம் அது பயன்பட்ட காரியத்தை எண்ணி மகிழ்கிறான். இதில் சுயநலம் இல்லையா?

திருடுகிறான். தாசி வீட்டுக்குச் செல்கிறான். அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்கிறான், பழிவாங்குகிறான். இதிவெல்லாம் அவனுக்கு ஒருவித மனத்திருப்தி ஏற்படுகிறதே - பிறர் துன்பத்தினால் ஏற்படும் சுயநலம் இல்லையா?

இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலம். ஆதலால் மனிதன் பிறர் நலம் பேணித், தன்னலம் இல்லாமல் செய்கின்ற காரியம், எதுவுமே இல்லை என்பதே உண்மை.”

சென்னை கோகலே ஹாலில் நண்பர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பெரியார் “நாம் கோயிலுக்குள் செல்ல உரிமை கேட்டுப் போராடி, உள்ளே சென்று விட்டோமானால், உடனே பார்ப்பான் வெளியில் வந்து, இப்போது நாம் செய்யும் காரியத்தைப், பிரச்சாரத்தைத் தொடங்கி விடுவான். நாம் பேதங்களை ஒழிக்கத் தானே கோயிலுக்குள் செல்ல விரும்புகிறோம்! இப்போது போய்க் கோயில் ரிப்பேருக்காக அரசு 4 கோடி ரூபாய் செலவழிக்கிறதாம். என்ன நியாயம்? இந்தப் பணத்தில் விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் அமைக்கலாமோ” என்று கருத்துரைத்தார்,

முதல்வர் கலைஞர் 8-11-71 மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். உடுமலை நாராயணன் மறைவால் ஏற்பட்ட பொள்ளாச்சி பார்லிமெண்ட் இடைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் மோகனராஜ் அமோக வெற்றி பெற்றார். தனக்கு இந்தத் தொகுதி வேண்டுமென்று கேட்ட, மதியழகன் தம்பி கே. ஏ. கிருஷ்ணசாமிக்கு, ராஜ்யசபை உறுப்பினர் பதவியைத் தருவதாகக் கலைஞர் உறுதி கூறினார். பொள்ளாச்சி இடைத்தேர்தலும் புதிய பாடமும், என்ற தலையங்கத்தில், 16-11-71-ல் “விடுதலை” எதிர்க்கட்சிகள் திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.