பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

596

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஜெனரல்களும் வேண்டியும் கேட்டுக் கொண்டும், மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். வேறெந்தப் பதவியையும் விரும்பியவன் அல்லன்.

என் பொதுத் தொண்டால் கூட்டம் மாநாடுகள் மூலமாக வரும்படி 1 லட்ச ரூபாயிருக்கும். மற்ற சொத்துகள் டிரஸ்ட் ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தாகும். நான் அவற்றிலிருந்து திருச்சி காலேஜுக்கு 5 லட்சம், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு 1 லட்சம், ஈரோடு குழந்தைகள் வார்டுக்கு 1 லட்சம், மற்றும் சில்லறையாகக் கொடுத்தது 2, 3 லட்சம் ரூபாய்க்குக் குறையாது.

இயக்கத்துக்கு நான் வாங்கியிருக்கிற சொத்துகள் 30 லட்ச ரூபாய் பெறும். எங்கள் டிரஸ்ட் சொத்துகள் 20, 30 லட்ச ரூபாய் பெறும். இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும் தலைவர் என்கிறமுறையில் என் ஆதிக்கத்தில் உள்ளதால், சொத்து வளர்கின்றது; பெருகுகின்றது இதனால் எனக்கென்ன பலன் என்றால், கவலை தொல்லை அதிகமாகிறது. இன்கம்டாக்ஸ் மூலம் எவ்வளவு சொத்து குறையுமோ?

எனது தொண்டின் பயனாய்ப் பலர், நினைக்க முடியாத பதவி அந்தஸ்து செல்வாக்கு அடைந்துள்ளார்கள், நான் அவர்கள் யாரிடத்தும் கைநீட்டாமல், இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறேன். எனது நிலை தாழாமல் வளர்ந்து கொண்டுதான் வருகிறது.

ஏன் இவற்றையெல்லாம் சொல்லுகிறேன் என்றால், உங்களிடம் மன்னிப்புக் கேட்பதற்கு ஏன் மன்னிப்பு என்றால், சுற்றுப் பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு!

சென்னையிலோ, திருச்சியிலோ, வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்து கொண்டு, துண்டுப் பிரசுரம், வால் போஸ்டர், சிறு சித்திரப் புத்தகம் பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம்; அலைய வேண்டாம் என்று பார்க்கிறேன். இனி யார் தயவையும் விரும்பாமல், யார் விஷயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல், சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகிறேன்.

நான் சென்னைக்கு வந்தால் 'உண்மை' மாத இதழையும் கொண்டு வரலாம். பல சங்கடங்களும் இருக்கின்றன! மணியம்மையார் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கின்றது. பல பள்ளிகள், ஒரு பண்ணை , பல வீடுகள் திருச்சியில் உள்ளன. நான் சென்னைக்கு வந்து தனியாய் இருக்க மணியம்மையார் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்தால் திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். என் உடல்நிலை மன நிலையைப் பொறுத்துதான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன.

மற்றொரு முக்கியமான விஷயம்; சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு, சினிமா பார்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.