பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

597



கோயில் பகிஷ்காரம் செய்துவிட்டாயா என்று கேட்பீர்கள். அது அவமானம்தான். ஆனாலும் நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை என்றாலும், கலைஞர் தடையை நீக்கும்போது ஆரம்பிப்பேன். ஆனால் சினிமா பகிஷ்காரத்துக்கு யாருக்கும் ஆட்படமாட்டேன். அது அண்மையில் துவக்கப்படும். இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெளியிட இருக்கிறேன். வணக்கம்"

சில படங்கள் புராண, மத, கடவுள் பிரச்சாரம் அதிகம் செய்து வருவதால், அத்தகைய சினிமாக்களையே பகிஷ்காரம் செய்ய இருப்பதாக மறுநாள் விளக்கமளித்தார் பெரியார்.

"மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு, நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

உதாரணமாக இன்று பார்ப்பனர்களுக்கு, அவர்கள் எந்த வகுப்பார்களானாலும், சமுதாயத்துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும், (சமஸ்கிருதம்) வடமொழி என்கிற ஒரு மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பலதுறைகளில் ஆதிக்கம் பெற்ற தாலுமே, தமிழர்களுக்குள் இனவுணர்ச்சி புலப்படவில்லை; குறைந்து வந்துவிட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும், இந்தி ஆதிக்கம் பெற்று, இந்தி மயமாகி விட்டால், இந்தியும் ஆட்சி பீடம் ஏறிப் பெருமை பெற்றுவிட்டால், தமிழன் நிலை என்ன ஆகும் என்பதைச் சிந்தியுங்கள்" இந்த ஆழ்ந்த கருத்தினைப் பெரியார் விடுதலை"யில் 34-7-72 அன்று வடித்திருந்தார்.

கர்நாடகமாநிலத்தில், ஒரு மாணவன் குடுமி வைத்துக்கொள்ள மறுத்ததால், அவனுக்கு மாணவர் உணவு விடுதியில் அனுமதி கிடைக்கவில்லை என்பதை வன்மையாகக் கண்டித்து பெங்களூரில், 23-7-72 அன்று சட்டமன்றத்தில், எஸ்.எம். சந்திரசேகர் பேசினார். “தமிழ்நாட்டுப் பெரியார் இங்கேயும் பிறக்கவேண்டும்; நமது மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பெரியார் தேவை" என்றும், தமக்குப் பெரியாரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு எனவும் அவர் கூறினார்.