பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

605


முடியாமல் அந்நிய ஆட்சி என்றும் சொல்ல முடியாமல் தவிக்கின்ற நிலைமையில் இருக்கின்றோம்.

நாட்டின் சுதந்தரம் இந்த யோக்கியதையில் இருக்கிறது. நமக்கு உண்மையான சுதந்தரம் வேண்டுமானால், தமிழ்நாடு தனித்த ஏகபோக ஆட்சியாய் இருக்க வேண்டும்.”

21-ந் தேதி முதலமைச்சர் கலைஞர் ஹைதராபாத்தில் பேசும் போது, “பெரியாரைப்போல் உங்கள் மாநிலத்தில் யோகி வேமண்ணா, சவுதுரி ராமசாமி ஆகியோர் உள்ளனர்” என்று சிறப்பித்துக் கூறினார். 22-ந் தேதி கும்பகோணம் அருகில் பெரியார் வேனில் ஒரு டிராக்டர் மோதி, வேன் கதவு நசுங்கிவிட்டது. பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தவிர, ஒன்றும் ஆபத்தில்லை. டிராக்டர் ஓட்டிமீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துவிட்டுப் பெரியார் மாயூரம், திருவையாறு, மண்ணச்சநல்லூர் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து செல்கிறார் என்று வீரமணி அறிவித்தார். இராவண காவியம் பாடிய புலவர் குழந்தை 24-ந் தேதி மறைந்தார். பஞ்சாபின் சீர்திருத்தவாதியும் அங்கே பெரியாரைப் போலப் பிற்படுத்தப்பட்டோருக்காகப் பாடுபடுபவருமான சந்த்ராம் பி.ஏ., ஹோஷியார்பூரிலிருந்து பெரியார் பிறந்த நாளை ஒட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார். பெரியாரும், அண்ணாவும் எங்கள் கண்களிலேயே எப்போதும் நிற்கிறார்கள். இவர்கள் தொண்டு பாராட்டத்தக்கதாகும் என்று புகழ்ந்தார் அவர்.

இராஜாஜி காலத்தில் சட்டமன்றச் செயலாளராயிருந்த ஆர்.வி. கிருஷ்ணய்யரின் மகன் ஆர். கே. பாலசுப்ரமணியம் சென்னையில் பாராளுமன்றப் பணிகளுக்கான ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறார். “தமிழ்நாட்டில் பெரியாரின் ஓய்வற்ற பணிகளால் பல்வேறு துறைகளில் மக்களிடையே குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. அவரது தொண்டுகளை அங்கீகரித்து அவரை நட்புடன் அணைத்துச் செல்வது ஆட்சிக்கு நல்லது” என்று அவர் பிரதமர் இந்திரா காந்திக்கு ஒரு விவரமான கடிதம் எழுதியிருந்தார் 30-9-72 அன்று. அதற்குப் பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் என்.கே. சேஷன் “மேற்கண்ட கடிதம் கிடைக்கப்பெற்றது. மிக்க நன்றி பிரதமர் கடிதத்திலுள்ள விஷயங்களைப் பார்த்துக் கொண்டார்” எனப் பதில் விடுத்திருந்தார் 3-10-72-ல்.

4-ந் தேதி வள்ளலார் விழாவில் பேசிய முதல்வர் “அடிகளார் போன்றவர்கள் எவ்வளவு பேசினாலும் நமது தமிழ் மக்களை எழச்செய்ய முடியாது. அவர்களது கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து எழுப்பப் பெரியார் எனும் யானைதான் மிதிக்க வேண்டும்” என்றார். கல்வி சம்பந்தமாக அடைந்துள்ள முன்னேற்றம் 1967-ல் 27 கல்லூரிகள், 72-ல் 52, மாணாக்கர் எண்ணிக்கை 1967-ல் 80,000 1972-ல் 1,83,000 என்றார்.