பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

607


உறுப்பினர்களையும், 18 ஆயிரம் கிளைகளையும் கொண்ட கழகம் இது. என்னுடைய 27 ஆண்டு கால நண்பரான அவரையோ, அல்லது என்னையோ காப்பதைவிடக் கழகத்தைக் காப்பாற்றுவதே முக்கியம். கழகத்தில் ஊழல் என்று பொது இடத்தில் பேசியதற்காக அவரை விலக்கிவைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று விளக்கினார்.

11-ந் தேதி பெரியார் மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். தி.மு. கழகத்தின் பொருளாளரே இவர்தான். கணக்குத் தெரிய வேண்டுமென்றால், இரகசியமாக, உறவு முறையில் கேட்டிருக்கலாமே! பொது மேடையில் பேசியதால் கழகத்துக்குத்தான் கேடு செய்தார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டால் கழகத்தின் கதி என்ன? எதிர்காலம் இருக்குமா? வெளியில் போவதற்குச் சாக்குத் தேடியது போல் போய், இப்போது குப்பை போடுகிறார்கள். ஆகையால் தமிழ் மக்கள் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும்” என்றார். 12-ந் தேதி பெரியாரே முன்னின்று நடத்திய மணிவிழா ஒன்று. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கட்கு 12-10-72 அன்று வயது 61. காந்தம்மையாருடன், இருவரையும் மணமேடையில் அமர்த்தி விழா எடுத்தனர், பெரியார் சார்பில் வீரமணியும் சம்பந்தமும் முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் நாவலர், அன்பில் தர்மலிங்கம், க. ராஜாராம் ஆகியோரும், மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், செட்டி நாட்டரசர் ராஜாசர் முத்தையாச் செட்டியார், எம். ஏ. எம். ராமசாமி, கா. திரவியம், கா. து. நடராசன், சை. வே. சிட்டிபாபு, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரும் வாழ்த்துரைத்தனர். மகனுக்குத் தந்தை நடத்தும் புதுமையான அறுபதாண்டு நிறைவு விழா இது என்றார் நாவலர். கலைஞர் பேசுகையில் “தந்தை பெரியார் கையில் தி.மு. கழகக் குழந்தையை ஒப்படைத்திருக்கிறோம். நோய் போக்கும் பச்சிலை மூலிகை வைத்திருக்கும் தாய்தான் நமது பெரியார். இந்தத் தாயார் இந்தக் குழந்தைக்குத் தானே தைத்த (பதவிச்) சட்டையை அணிவித்துக், குழந்தையை நடக்கவிட்டு, முன்னும் பின்னும் பார்த்து மகிழ்வார். சட்டையில் ஊசி தங்கிப்போய் எங்கேயாவது குத்துமோ என்றும் கண்காணிப்பார். ஆயினும், ஏதாவது எதிர்ப்பு வந்தால்தான் எப்போதுமே பெரியாருக்குப் பிடிக்கும்!” என்றார்.

13-ந் தேதி தி.மு.க. செயற்குழுவும், 14, 15 தேதிகளில் பொதுக்குழுவும் கூடி, எம்.ஜி.ஆர். மீது எடுத்த நடவடிக்கை சரியென முடிவு செய்து, 22-ந் தேதி 200 ஊர்களில் விளக்கக் கூட்டங்கள் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

13-10-72 அன்று காலை, பெரியார் அழைப்பின் பேரில்,