608
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
திடலுக்கு வந்து எம்.ஜி.ஆர். பெரியாரைச் சந்தித்தார். “நீங்கள் பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் கேடுவராமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமையல்லவா?” என்று கேட்டார் பெரியார். எம்.ஜி.ஆர். தனது நிலையை எடுத்துக்கூறி, பெரியார் கூறியது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அன்றே, பகல் 11.15 மணிக்கு முதல்வர் கலைஞரும், அமைச்சர்களான நாவலர், மன்னை நாராயணசாமி க. ராஜாராம் ஆகபயாரும் வந்து, இந்தியப் பிரதமர் பெரியாருக்கு வழங்கிய தாமிரப்பட்டய விருதினை நேரில் அளித்தனர். கலைஞர், பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டிப் பழங்களுடன் பட்டயத்தை ஒரு தாம்பாளத்தில் வைத்துப், பெரியாருக்குப் பணிவன்புடன் வழங்கினார். அதைவிடப் பணிவன்புடன் அதனைப் பெரியார் பெற்று மகிழ்ந்தார். அந்தப் பட்டயத்தில் இந்தி மொழியில் “பாரத விடுதலையின் 25 ஆண்டு நிறைவையொட்டி, பெரியார் ஈ.வெ. ராமசாமிக்கு, பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி, நாட்டின் சார்பில் வழங்குகிறார்” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. பெரியார், தாம் எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசியது பற்றி அவர்களிடம் விளக்கிக் கூறிவிட்டுத் திருச்சிக்கு வேனில் புறப்பட்டார். விழுப்புரம் அருகில் வேன் செல்லும்போது, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எனப்படுவோர் வேனை வழிமறித்து, எம்.ஜி.ஆர். வாழ்க, கருணாநிதி ஒழிக என்று முழக்கமிட வற்புறுத்தினர். உள்ளே அமர்ந்திருந்த பெரியார் எழுந்ததும், அனைவரும் ஓடிவிட்டனர்.