பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

613



ஓட்டுக்குப் பணம் கொடுத்து வாங்கியதால், அவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர்களாயிருந்தால், கட்சிக்காவது சொல்லிவிட்டுத்தான் செல்ல வேண்டும். ஏனென்றால், இந்த அயோக்கியர்கள், இப்படிச் செய்வது பொது நலனுக்கு ஏற்றதா என்று எண்ணிப் பாராமல், தங்கள் அப்பன் வீட்டுப் பரம்பரைச் சொந்தக் காரியம் என்று கருதகிறார்கள்,

ஓர் உதாரணம், அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவன் கருதினாலும், அவன் வீட்டிலேயே - யாரோ அமாவாசையில் பிறந்தவன் திருடிவிட்டால் - அவன் அதை வெளியில் சொல்லாமலும், போலீசில் பிராது கொடுக்காமலும் இருந்து விடுவானா? - அது போல, இன்று கட்சி மாறுவது சுபாவம் என்றாலும், நான் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

நாட்டில் இப்படிப்பட்ட அயோக்கியர்களைக் காப்பாற்ற, மூடி மறைக்கப், பிறவி அயோக்கியப் பத்திரிகைக்காரர்கள் பலர் இருக்கின்றார்கள்; இவர்களுக்கு மானாவமானமில்லை!

யோக்கியமான காரணம் காட்டாமல், பதவியை இராஜிநாமாச் செய்யாமல், கட்சி மாறுகிறவர்கள் அயோக்கியர்கள் என்று சுவரில் எழுதுங்கள். துண்டுப் பிரசுரம் போடுங்கள். கல்லில் இவற்றைச் செதுக்கி முச்சந்தியில் நடுங்கள், என்று கேட்டுக் கொண்டு இப் போதைக்கு முடிக்கிறேன்.

மனவேதனைப்பட்ட வேதனையாளன்.”

அடுத்து, கோவையில் 5-ந் தேதி பெரியார் பேசுங்கால் “தமிழ் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தமிழரல்லாதாரின் ஆதிக்கமே மிகுந்து விட்டது. பாதிக்கு மேல் மலையாளிகளின் ஆதிக்கம்தான் காணப்படுகிறது. எம்.ஜி.ஆர். துரோகத்தாலும், டில்லி அரசின் சூழ்ச்சியாலும், தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால், இனி தமிழனுக்கு வாய்ப்பு ஏது? கலவரம் செய்வதற்கு மாணவர்களை வேறு தூண்டிவிட்டுப் பயன் படுத்துகிறார்கள்; இப்படியாகக் கவலையோடு நாம் சிந்திப்பதற்குரிய பல விஷயங்கள் இருப்பதால், விரைவில் ஒரு மாநாடு கூட்டி வேலைத் திட்டம் வகுக்கலாம் என எண்ணுகிறேன்” என்றார். 11-ந் தேதி சென்னை வாயிட்ஸ் எஸ்டேட்டில் “நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால், 20 லட்ச ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதே! இவ்வளவும் யாரால்?” என்று கேட்டார் பெரியார்.

10-11-72 அன்று எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தி அமைச்சரவை ராஜிநாமாச் செய்யக் கோருவதைக் குறிப்பிட்டு