பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அவர்களின் தந்தை ரத்னசபாபதி அவர்கள் மறைந்த துக்கம் விசாரிக்கப் பெரியாரும், மணியம்மையாரும் 29-ந் தேதி அங்கு சென்று, ஆறுதல் கூறி வந்தனர்.

பெரியாரின் மனவேதனை தணியவேயில்லை என்பதற்கு ஒரு சான்று. 1-11-72 “விடுதலை”யில் அவர் எழுதிய தலையங்கம். தெற்கு அவர் கொடுத்த தலைப்பே அயோக்கியர் அயோக்கியர், மகா அயோக்கியர்' என்பது. என்ன எழுதினார் தெரியுமா? “அரசியலில் கட்சி மாறுகிறவர்கள் அயோக்கியர்கள், அயோக்கியர்கள், மகா அயோக்கியர்கள், அரசியலில், ஒரு கட்சித் தலைவர்களிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சி, சிபாரிசு பிடித்து, தன்னை ஒரு இடம் கொடுத்து ஏற்றுக்கொள்ளச் செய்து, தேர்தலில் 10 ஆயிரம் 20 ஆயிரம் கட்சிப் பணச் செலவில் பதவிக்க வந்து, கைதூக்குவது தவிர வேறு ஒரு தொண்டும் கட்சிக்குச் செய்யாமல், பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சர்க்காருக்குப் பல சிபாரிசுகள் செய்து பணம் சேர்த்துக் கொண்டு, கட்சிப் பெயரால் பதவிப் பெயரால் பல சலுகைகளைப் பெற்று அவற்றாலும் பணம் சம்பாதித்துக்கொண்டு, தகுதிக்கு மேற்பட்ட சொத்தும் அந்தஸ்தும் வருவாய்க்கு வழியும் தேடிக் கொண்டதைத் தவிர, வேறு காரியத்திற்குப் பயன்படாத அநாம தேயங்கள் சுயநலத்துக்கு என்றே கட்சியைக் காட்டிக் கொடுக்க, விலை பேசி வாங்கி வேறுகட்சி என்னும் பெயரால் தானிருந்த கட்சிக்கு மனதறிந்து கேடு செய்யும் கட்சிக்குப் போய்த் தன் பெயரைக் கொடுப்பதும், தன்னை ஆளாக்கிய சுட்சியைக் குறை கூறுவதும், அக்கட்சியை ஒழிக்கப் பாடுபடுவதும், அதற்குத் தன் பெயரைக் கொடுப்பது மான காரியத்தில் ஈடுபடுவதைத்தான் - நான் அயோக்கியம், அயோக்கியத் தன்மை என்றும், அயோக்கியர் என்றும், மேலும் அப்படிப்பட்டவர் மகா அயோக்கியர் என்றும் பொது நன்மையை உத்தேசித்துக் கூறுகிறேன்!

இம்மாதிரிக் கண்டிக்காவிட்டால், இப்படிப்பட்டவர்களை மக்கள் வெறுக்கும்படிச் செய்யாவிட்டால், நாளாவட்டத்தில் யோக்கி யமான பலருக்கும் நாக்கில் தண்ணீர் வடிய ஆரம்பிக்கும். கட்சி மாறுகிறவர்கள், தமது தேர்தலுக்குக் கட்சி செய்த செலவுத் தொகை களைக் கொடுத்துவிட்டு, கட்சியால் தாம் பெற்ற பதவியையும் ராஜிநாமாச் செய்துவிட்டு வெளியேற வேண்டும். அப்போதுங்கூட இதுவரை தானிருந்த கட்சியில் மக்களுக்கு என்ன கெடுதல் ஏற்பட்டது; அதைத் தவிர்க்கத் தானெடுத்த முயற்சி என்ன? தெரிவித்த யோசனை என்ன? என்பனவற்றை விளக்குவதோடு, தாம் சேரப்போகும் கட்சியின் யோக்கியதை என்ன? நாணயம் என்ன? அதனால் நாட்டு மக்களுக்கு விளைய இருக்கும் நன்மை என்ன? என்பதையும் தன்னுடைய ஓட்டர்களுக்க விளக்க வேண்டும்.