பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

615


சிலையை, 16-ந் தேதி உடைத்திடும் முயற்சிகள் நடந்ததாகச் செய்தி!

"சுயராஜ்யா" இதழில், தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று இராஜாஜி எழுதி, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல், பெரியாரின் குமுறும் எரிமலையான நெஞ்சத்தில் மேலும் ஆத்திரத்தை மூட்டிவிட்டார். நவம்பர் 15, 16 தேதிகளின் தலையங்கத்தில், பெரியார் ராஜாஜியைப் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டார்! “நம் நாட்டு அரசியலில் ஆகட்டும், பொது வாழ்வில் ஆகட்டும், பெருவாரியான மக்களால் பாராட்டப் படக்கூடிய பெரிய மனிதர் என்பதற்கு ஒரு நபர்கூட இல்லாமல் போய்விட்டார்கள். தமது இன மக்களால் பெரியவராக விளம்பரம் செய்யப்படும் இராஜாஜி ஒருவர் இருக்கிறார். ஆனால் அவரைப் பெரிய மனிதன் என்று சொல்வதற்கு அவருடைய வயதைத் தவிர அவரிடம் வேறு ஏதாவது தன்மை இருக்கிறதா என்றால், ஒன்றுமேயில்லை!

அவர்களிடமிருக்கும் தொண்டு - முதலாவது அவருடைய சமுதாய எதிரிகளை ஒழிக்க வேண்டும்; தமது சமுதாயம் ஒன்றே உயர் நிலையில் வாழவேண்டும். இதற்காக அவர் உண்மை , யோக்கியம், நேர்மை, நாணயம், மானம் முதலிய உயிர் போன்ற அருங் குணங்களையே தியாகம்? செய்து விட்டார்! தன்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்று சிந்திப்பதையே தியாகம் செய்து விட்டார். இந்தத் தியாகம் அவரது சுய நலத்திற்காக அல்ல; தமது சமுதாய நலத்திற்காகவே ஆகும். ஒரு விபசாரி (வேசி) பதிவிரரை வேடம் போட்டால், எப்படி ஒரு குடும்பப் பெண் போல நடந்து கொள்வாளோ- அது போல் தனது இலட்சியத்தில் அவர் நடந்து கொள்கிறார். இதில் அவருக்கு வெட்கமோ, அவமானமோ, பழிக்கு ஆளாகும் தன்மையோ ஏற்பட அவசியமேயில்லை. என்ன செய்தாவது நம்மை ஒழிக்க வேண்டியதுதான் அவரது தலையாய கடமை.

ஆகவே, இராஜாஜிக்கு என்னதான் புகழ் இருந்தாலும், அவரைப் பெரியவர் என்று நாம் கருதினால் - பிறர் கருத இடம் கொடுத்தால் - நமக்கு அழிவு நெருங்கிவிடும்.

இவரது அரசியல் நாணயத்தை எடுத்துக் கொண்டால், மாதம் 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க மாட்டோம் என்று கட்சியின் கொள்கையாகச் செய்து கொண்டு, கட்சியின் மூலமே பதவிக்கு வந்து, மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளமும், பிறகு பென்ஷனும் வாங்கி, சொத்துச் சேர்த்துக் கொண்டிருக்கும் தியாகிதானே இவர்? அரசியல், சமுதாய வாழ்வில் இவர் எதில் யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறார்? இவர் வந்து பொது மக்களுக்கு அறிவுரை சொல்ல, இவருக்கு எதில் என்ன யோக்கியதை இருக்கிறது?