பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

616

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



அயோக்கியத் தனமான பத்திரிகைகளின் ஆதரவு இருக்கிறது என்பதாலும், தன்னிடம் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதாலும், ஒரு மனிதன் எந்த அயோக்கியத்தனத்தையும் செய்யலாமா? செய்தாலும் - மடையனும். அயோக்கியனும், துரோகிகளுமாக இருக்கும் மக்கள்தாம் சரி என்று சொல்வார்கள்; யோக்கியர்கள் இழித்துத்தான் கூறுவார்கள்!

ஏன் இவ்வளவு வேதனைப்பட்டு எழுதுகிறேன் என்றால், 'கருணாநிதி ஆட்சி விலகிட வேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும்' என்று அவர் சொன்னால், அப்படிச் சொல்லும் அவர் கருத்தையும் நான் புரிந்து கொண்டால், மனம் பதறுமா? பதறாதா?

அயோக்கியத்தனத்திற்கு எல்லை இல்லையென்றால் மனித சமுதாய நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களுக்கு மனம் பதறாதா? வெடிக்காதா? என்று தான் கூறுகிறேன். எனவே மக்களே! நீங்கள் அவற்றை மதிக்க மாட்டீர்கள் என்றிருந்தாலும், உங்கள் வெறுப்பை அவரர்களுக்குக் காட்டுங்கள் என்று வேண்டி இதை முடிக்கின்றேன்!

19ந் தேதி சென்னையில் சூளைப் பகுதியில் பேசிய பெரியார் "எம்.ஜி.ஆர். வரிகொடா இயக்கம் ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லி யிருக்கிறாரே-இவர் வரி (இன்கம்டாக்ஸ்) கொடாததால் இப்போது இயக்கம் நடத்தப் போவதாகச் சொல்கிறாரா?" எஎன்று நகைச் சுவையோடு கேட்டார். 13-ந் தேதியன்று சட்டசபையில் மதியழகன் நடத்தையைக் கண்டித்து, அகில இந்தியப் புகழ்பெற்ற ஆங்கில ஏடுகளான நேஷனல் ஹெரால்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்டேட்ஸ்மென், இந்துஸ்தான் டைம்ஸ், பெட்ரியாட் ஆகியவை எழுதியிருந்தன. அங்ஙனமிருக்க, "மதியழகன் யோசனை நல்லதுதான் என்று சி.சுப்ரமணியம் கூறுகிறாராம். இவருக்கும் மோகன் குமாரமங்கலத்துக்கும் இன்றுள்ள பதவி தி.மு.க. இட்ட பிச்சை என்பதை மறந்து விட்டார்களா? கலைஞர் சொல்வது போல், பசு சும்மாயிருக்க இந்தக் கன்றுகள் ஏன் துள்ளுகின்றன? கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என இவர்களை எச்சரிக்கிறோம். இனி இந்த விவஸ்தைகெட்ட பேச்சு வேண்டாம்!" என விடுதலை 20-ந் தேதி தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

18.11.72 சென்னை மாநகராட்சியில் தி.மு.க, புதிய மேயராக ஆர் ஆறுமுகமும் (பிற்படுத்தப்பட்டோர்) துணைமேயராகக் கன்னியப்பனும் (தாழ்த்தப்பட்டோர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1965 இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து வீரமரணம் எய்தியோர் குடும்பத்துக்கு, மாதம் நூறு ரூபாயும், 53 தியாகிகட்கு மானியம் 2,000 ரூபாயும் தரப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.