பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

617



21.11.72 “விடுதலை”யில் ஒரு பெட்டிச் செய்தி: ‘இராஜாஜியின் பரிதாப நிலை’ என்ற தலைப்பு. “11.11.72 அன்று எம்.ஜி.ஆர். சென்று இராஜாஜியைச் சந்தித்தாராம். ‘நீங்கள் இப்போது செய்ததைப் பத்தாண்டுகட்கு முன்பே செய்திருக்க வேண்டும்’. என்றாராம் அந்த மேதை (அப்போது தி.மு.க. ஆட்சியிலா இருந்தது?) என் நண்பர் ஏன் இப்படி உளறினார் என்று தெரியவில்லை! பைத்தியக்காரன் வாயில் கொஞ்சம் கள்ளையும் ஊற்றியது போல் ஆகிவிட்டதா? ஈ.வெ.ராம சாமி” என்பதாக! அன்றே “எனது சுற்றுப் பிரயாணம்” என்ற தலையங்கமும் பெரியாரால் எழுதப்பட்டிருந்தது:- “இப்போது இருக்கின்ற உடல் நிலையில் நான் சுற்றுப்பிரயாணம் செல்லவே தகுதியற்றவனாக இருக்கின்றேன். ஆனாலும் என் மனவேதனை, துடிப்பு இவற்றைத் தணிக்க, இந்தச் சுற்றுப்பிரயாணம் காரணமாயிருப்பதால் துணிவு பெற்றேன்! எதற்காகவும் மனந்தளராமல் தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்கப் புறப்பட்டு விட்டேன்” என்று. அத்துடன் அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார்:-“ஒருவன் கச்சேரி கேட்கப் போனான். அவன் புதிதாகப் போனதால் எங்கேங்கே தலை அசைக்க வேண்டுமென்று தனக்குத் தெரியாதே என்று நண்பனிடம் யோசனை கேட்டான். உன் குடுமியில் ஒரு கயிற்றைக் கட்டி என்கையில் பிடித்துக் கொண்டிருப்பேன். நான் அதை இழுக்கிற நேரத்தில், நீ தலையாட்டினால் போதும் என்றான் நண்பன். அதேபோல, இன்னொரு கதை மகாபாரதத்தில். அஞ்ஞாத வாசத்தில் (விராடபர்வம்) இருந்த போது, அர்ச்சுனன் உத்தரகுமாரனுக்குத் தேர்ச்சாரதியாகி, யுத்தத்துக்குப் போனார்கள் இருவரும். எதிரிகளைக் கண்ட உத்தர குமாரன் பயந்து போய் தேரைத் திருப்பு; ஊருக்குப் போய்விடலாம் என்றான். அர்ச்சுனன் விடுவதாயில்லை. உத்தர குமாரனைத் தேர்க்காலில் கட்டிப்போட்டு விட்டுத் தானே போருக்குப் போனான். இந்த இரண்டு கதைகளிலும் சொன்னது போல, இப்போது எம்.ஜி.ஆர். தயங்கினாலும், கம்யூனிஸ்டுகள் அவரை விடுவதாயில்லை” என்றார் பெரியார்.

28-ந் தேதி எம்.ஜி.ஆர். ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் தன்னை அழித்திட முயன்றதால்தான் புதுக்கட்சி தொடங்கிவிடத் தான் முடிவு செய்ததாகக் கூறியிருந்தார். 29-ந் தேதி சேலம் வேலூரில் முதல்வர் கலைஞர் பேச இருந்த கூட்டத்தில் பெருங்கலகம் விளைத்து, மின்சார டிரான்ஸ்ஃபார்மரைக் கொளுத்திக் கலவரம் செய்தனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள். மறுநாள் தஞ்சையில் பேசிய பெரியார் “இவ்வளவு தூரம் போன பிறகு இந்த ஸ்தாபனத்தைத் தடைசெய்ய வேண்டியதுதானே” என்றார்.

சென்னை சட்டமன்றம் 2.12.72 அன்று சபாநாயகர் மதியழகன் தலைமையில் துவங்கியபோது, அவரை நீக்குகின்ற தீர்மானம்