பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

647


கோர்ட்) தீர்ப்பு இருப்பதனால், இன்னும் சாமி தரிசனத்துக்கு என்று கோயிலுக்குப் போகும் யாருமே, தீண்டத்தகாதவர்கள் போல், வாயில் படிக்கு வெளியில்தான் எட்டி நிற்க வேண்டும்.

இன்று அமுலில் இருக்கும் இந்து லா (Hindu Law) என்னும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களை மிக இழிவாகக் கூறி, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்குச் சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன வென்றால் - கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள் - என்பதாகும். இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி, சூத்திரர், பார்ப்பானின் தாசி மக்கள், - என்று ஆகிவிடுகிறார்கள்.

நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால், இழிவு நீங்கிவிடும் என்றுதான் நான் முதலில் கருதினேன். பின்பு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகுதான், இது தெரிந்தது!. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இன்று நம்நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில் தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால் எல்லா மக்களும் பயப்படுகிறார்கள். பதவி கிடைக்காதே என்கிற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு, பல பதவி, சில உத்தியோகம் பெற நேர்ந்ததோடு, அரசியலில் பார்ப்பனரின் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்க முடிந்தது என்பதல்லாமல், சமுதாயத்துறையில் உள்ள அடிப்படை இழிவு, அப்படியே தங்கி, நல்ல அளவுக்குப் பலமும் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, நாம் சட்டத்தைப்பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது, ஒவ்வொரு தமிழனுக்கும் மிக அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பேட்ஜுகளுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து, மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களே இளைஞர்களே! பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள் உறுதி கொள்ளுங்கள்!"