பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
5. எழுந்தார்

தந்தை மகனை முந்தி அமர்த்துதல் - நாயக்கர் பெருமகன்

நல் அடக்கம் - நகரத் தந்தையின் புகழ் தரும் பணிகள் 1907 - ல் முதல் மன முதிர்ச்சி - 1920 - ல் மன எழுச்சி.


"ஈ."வெ. இராமசாமி நாயக்கர் மண்டி”யில் வாணிபம் நாளுக்கு நாள் விரைவாக முன்னேறி, வெகுவாக மேலோங்கி வளர்ந்து வந்தது. கண்ணும் கருத்தும் கவனமாய்ச் செலுத்தி, எண்ணம் மொழி செயல் யாவும் அத்துறையில் ஈடுபடுத்தி, வணிகச் சமுதாயத்தின் வழிகாட்டியாய் விளங்கினார் இராமசாமி. பொறுப்பினை ஏற்ற பின்னர் இளைய மகனின் திருப்பத்தை உணர்ந்த வெங்கட்ட நாயக்கர், தாம் மெல்லமெல்ல ஒதுங்கி, ஓய்வாக இருந்து, மகனை முன்னுக்கு உந்தினார். பள்ளிப் படிப்புக் குறைவாயினும் பொது அறிவில் நினைவாற்றலில் மிதமிஞ்சிய வன்மை கொண்டதால் கணக்கு விவரங்கள், எண்சுவடி, வாய்ப்பாடு, சிட்டை குறிப்பு பேரேடு எழுதல், சிக்கலான விவகாரங்களைத் தீர்த்து வைத்தல், தகராறு எழுந்தால் தாமே வலிந்து சென்று வழக்கு விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கல் இவ்வாறாக இராமசாமியிடம் உள்ளுணர்வில் அரியதொரு மாற்றம் நிகழ்ந்தது.

தன் பெற்றோர், தன் சுற்றம், தன் பெண்டு, உடன்பிறந்தோர், தன் வீடு, தன் சொத்து என்பதான தன்னலக் குறுநோக்கு தேய்ந்து மாய்ந்து, ஊர்நலம் பொது நன்மை, சமுக மேம்பாடு, பிறர்முன்னேற்றம் என்பதான பொதுநோக்கு மெதுவாக விரிந்து பரந்து நிறைந்து வரலாயிற்று. வரவேற்கத்தக்க இந்த மாறுதல்களால், அப்போது கோவை மாவட்டத்தையே கொடுமைக்குள்ளாக்கிய பிளேக் நோயினால் பெரும் பரபரப்பும் பீதியும் ஆட்கொள்ள, மக்கள் நகரங்களையெல்லாம் காலிசெய்து, வசதிப்படி வெளியேறினார்களாகையால், ஏழை மக்கள் என்ன செய்வோம் என ஏங்கித் தவித்தபோது, பாங்குடன் மனமுவந்து தாமே முன்வந்து, அஞ்சாமல் அயராமல் அவர்களைக் காப்பாற்றினார். மகத்தான சேவை செய்ததாக மக்களால் மிக்க பெருமையோடு பாராட்டப் பெற்றார் இராமசாமி!