பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

88



1922-ல் திருப்பூர் மாகாண மாநாட்டில் கொண்டுவர முயன்று, விவாதத்தால் கோபம் மேலிட்டு, மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென முழங்கினார் ஈ.வெ.ரா! சேலம் விஜயராகவாச்சாரியார் அமைதிப்படுத்தி விட்டார்.

1923-ல் சேலம் மாகாண மாநாட்டிலும் தீர்மானத்தை முன் மொழிந்தபோது, கலவரம் மூளுவதாக அறிந்து, டாக்டர் நாயுடுவும், ஜார்ஜ் ஜோசஃபும் தலையிட்டுச் சமாதானம் செய்துவிட்டனர்.

1924-ல் திருவண்ணாமலை மாநில மாநாட்டுக்குத் தலைவரே ஈ.வெ. ராமசாமி தாம்! அங்கு தலைமையுரையிலும் இப்பிரச்னையைக் குறிப்பிட்டுப் பார்ப்பனர்களை எச்சரித்தார். ஆனால் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை, எஸ். சீனிவாச அய்யங்கார் ஆள்திரட்டி வந்து, தடுத்து நிறுத்திவிட்டார்!

1925-ல் காஞ்சிபுரத்தில் மாநில மாநாடு; திரு.வி.க. தலைவர். இறுதி முயற்சியாக இங்கேயும் தீர்மானம் கொணர்ந்தார் ஈ.வெ.ரா. தலைவர் நிராகரித்தார். அங்கேயே - எரிமலையின் குமுறல், கடலின் கொந்தளிப்பு, சூறாவளியின் சீற்றம், இடியோசை வெடிமுழக்கம் ஈ.வெ.ரா. எழுந்து நின்று தமது ஆரஞ்சுநிறச் சால்வையை மார்பின் குறுக்கே இழுத்துப் போர்த்தி, கைவசம் எப்போதும் இருக்கும் சிறு தோல் பெட்டியை விரைவாகக் கையில் எடுத்துக்கொண்டு, எந்நேரமும் தம் வலது கையிலிருக்கும் தடித்த கைப்பிரம்பைத் தரையில் ஓங்கித் தட்டி, உரத்த குரலில் “கல்யாணசுந்தர முதலியார் அவர்களே! நான் வெளியேறுகிறேன். காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெற முடியாது! காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை!” என்று வீரகர்ச்சனை புரிந்து, வீறு நடைபோட்டு, அடல் ஏறு போல், அஞ்சாநெஞ்சுடன், காஞ்சியில் வெளிவந்து, திரும்பிப் பார்த்தார்! ஆகா! தன்மான உணர்வால் உந்தித் தள்ளப்பட்ட தமிழ் இனக் காங்கிரஸ்காரர் நூற்றுக் கணக்கில் எழுந்திருந்து, அவரைப் பின்பற்றித் தொடர்ந்து, அவரது அணிவகுப்பில் வந்து நின்றிடக் கண்டு, என்றுங் காணாத பேரின்பங் கண்டார் ஈ.வெ. ராமசாமியார்!

காங்கிரஸ் ஒழிந்ததைக் கண்ணால் கண்டுவிட்டுத்தானே மறைந்தார் - பெரியார்!