பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தந்தை பெரியார்


பத்திரிகைகள் குருகுலத்தின் கொள்கையை கடுமையாக விமர்சித்தன.

காந்தி சமரசம் செய்ய முன் வந்தார்; "சாதியை ஒழிக்கப் பாடுபடும் காங்கிரசில் இருப்பவர்கள், சாதிப் பிரிவினையை வளர்க்கலாமா?" என்று கேட்டார்.

வ.வே.சு. ஐயர் காந்திஜி பேச்சையும் கேட்கவில்லை. "குருகுலத்தை என் இஷ்டப்படித்தான் நடத்துவேன்," என்றார்.

இதனால் கிளர்ச்சி மூண்டது. காங்கிரசு மானியத்தை நிறுத்தியது. குருகுலம் மூடப்பட்டது.

வ.வே.சு. ஐயரின் பிடிவாதத்தினால், பல இளம் குழந்தைகளின் எதிர்காலம் பாழாயிற்று.

1927-ம் ஆண்டு, 'திராவிடன்' என்னும் நாள் இதழுக்கு, ஆசிரியராக இருந்து, ஈ.வெ.ரா. அருந்தொண்டாற்றினார். தன் பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப் பெயரை நீக்கினார். குடிஅரசைப் போல், இதிலும் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியே, காரசாரமான, தம் கருத்துக்களை மக்களுக்கு எழுதி வந்தார்.

ஈ.வெ.ரா.வின் பத்திரிகை ஆசை மேலும் அதிக மாயிற்று.

மேல்தட்டு மக்களுக்கும், தனது கருத்துக்களும், கொள்கைகளும் சென்று எட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் 1928-ம் ஆண்டு 'ரிவோல்ட்' (REVOLT) என்கிற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார்.