136
தந்தை பெரியார்
- 'சேவை என்பது கூலியை உத்தேசித்தோ; தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல; மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான்' - என்பது பெரியாரின் கருத்து.
'சமுதாயத் துறைக்குப் பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்' என்று கூறிய பெரியாரின் மனம் -
- 'தமிழனை எப்படியெல்லாம் உயர்த்தலாம்; மற்றவருக்குச் சமமாகத் தமிழனை எப்படித் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம்' - என்பதைப் பற்றியே சிந்தித்த வண்ணமிருந்தது.
அதன் விளைவு -
1942 -ம் ஆண்டு 'திராவிடநாடு' பிரிவினைக் கொள்கையைப் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். அது பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
1943 -ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் முதலாவது திராவிடர் கழக மகாநாட்டைக் கூட்டி, தனித் தமிழ்நாடு வேண்டுமென்றார்.
பெரியார், ஒரு தனி சமுதாய மேம்பாட்டு நோக்கம் கொண்டவராக என்றும் இருந்ததில்லை.
எந்தக் கருத்தையும் - எந்தச் செயலையும் உலக அறிவியல் நோக்கோடு பார்ப்பவராகவே திகழ்ந்தார்.
எதையும் முன்னரே ஆராய்ந்து கூறும் உலகியல் பார்வையாளராகவும் திகழ்ந்தார்.