அமரர் கே.பி.நீலமணி
51
பேச்சில் - நடைமுறைப் பழக்க வழக்கங்களில், படிப்பில், கொள்கைகளில் - இப்படி அனைத்திலுமே அண்ணனும் தம்பியும், இருவேறு துருவங்களாகவே காட்சியளித்தனர்.
கிருஷ்ணசாமி, ஆசிரியர் அன்றாடம் கற்பிக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்டுப் படிப்பார். பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்கி நடப்பார். வகுப்பிலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
அதனால், அவரிடம் ஆசிரியர்கள் அன்பு செலுத்தினார்கள். பள்ளியிலும் நல்ல பெயர் வாங்கினார். ஆனால் -
இராமசாமியின் பள்ளிப் பருவமோ இதற்கு நேர்மாறாக இருந்தது.
பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. வந்தாலும் பாடங்களைக் கவனமாகக் கேட்டுப் படிப்பதில்லை - தனவந்தரான வெங்கடப்ப நாயக்கரின் பிள்ளை என்பதற்காக - இராமசாமி பரீட்சையில் எவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், கீழ் வகுப்புகளில் அவரை பாசாக்கி அனுப்பி வைத்தனர்.
எப்படியோ தம்பி, பரீட்சை சமயத்தில் கஷ்டப் பட்டுப் படித்து பாசாகி விட்டதாகவே கிருஷ்ணசாமி எண்ணி சந்தோஷப்பட்டார்.
மேல் வகுப்புகளுக்குப் போனாலும், இராமசாமியின் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாளுக்குநாள் தீய பழக்க வழக்கங்களும், கெட்ட நண்பர்களுடைய சகவாசமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.