உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இருப்பிலே இருந்து, வையை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்
[1]

என்று பாடுவார் வரந்தருவார். ‘தமிழ்விடுதூது’ ஆசிரியர் ‘தித்திக்கும் தெள்ளமுது’, ‘முத்திக்கனி’, ‘புத்திக்குள் உண்ணப் படுந்தேன்’ என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவார். ஆனால் தந்தை பெரியாருக்கு இம்முறை மனத்திற் குகந்ததாக இல்லை. தமிழ் மொழிபற்றி அவரது சிந்தனைகள்:

(i) தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழிவரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும் சமயத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.

(ii) தமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலகனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கியதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையடைந்துவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ்வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் செய்யும்.

(iii) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாளவேண்டிய மொழியாகும். நாகரிகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. முன்பு மதமும், கடவுளும், சாதியும் தலைதூக்கி நின்றிருந்த காலத்திற்கேற்ற வண்ணம் தமிழையும் கெடுத்து விட்டார்கள்... நாம் காலத்திற்கேற்ற வண்ணம் தமிழ் மொழியைச் சீர்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. பழங்கால அநாகரிகத்திற்கேற்றவற்றை மாற்றி இக்கால நாகரிகத்திற்கேற்றபடி சீராக்க வேண்டியது அவசியம்.

(iv) நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய் மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும்


  1. வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்- (வரந்தருவார்)