பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழகக் குறுநில வேந்தர்


எனவும், வருவனவற்றான் அறியலாம்.

இவற்றுள் வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவு என்றது, மோரியர் வடுகரை முன்னிட்டுக் கொண்டு தென்றிசையினிலமுள்ள வரையும் வென்று கொள்ள எண்ணிப் படையெடுத்து வந்த வரவு என்றவாறாம்.

இவ்வரலாறு அவர் படையெடுத்த போது தந்தேர் இனிது செல்லற்கு மலையையறுத்து வழிகண்டு வந்தனரென்றும், அப்போது மோகூர் அவர்க்குப் பணியாது எதிர்த்து நின்றதென்றும், அங்ஙனம் எதிர்த்து நின்ற நிலையின் மோகூர் தளராதபடி, கோசர் தாம் முன் உற்றுழி யுதவுவதாகச் சொல்லிய வண்ணம் அம்மோகூர் ஆலம் பலத்து இன்னிசை முரச மிரங்கத் தோன்றிப் பாசறை கொண்டு பகைப் படையைச் சிதைத்தனரென்றும் அறியலாம்.

உற்றுழியுதவுவதாகச் சொல்லியது “கோசர் நன் மொழி போன்று வாயாகின்றே” என்பதனாற் பெறப் பட்டது. தெம்முனை சிதைத்த ஞான்றை என்பதனால் மோகூர்க்கும் கோசர்க்கும் பொதுவான பகைப் படை மோரியர் படை என்று கருதப் பட்டது. மோகூர் பணியாமல் இருந்தது இயல்பாகிய வீரத்தானும் தம்மினத்தவராய கோசர் சமயத்து வந்து உதவுவார் என்ற துணிபானும் என்று நினையலாம்.

“தொன் மூதாலத்துப் பொதியில்” என்பவற்றால் பழைய ஆலமரத்தின் அரிய கிளைகளினிழலிலுள்ள அம்பலம் என்று கொள்ளப்பட்டு அதுவே ஆலம்பல மெனப் பட்டது. இம்மோகூரும் அதனை அடுத்து ஆலம் பலமும் கள்ளக் குறிச்சிச் சேகரத்து இன்று முள்ளனவாதல் நோக்கிக் கொள்க.