பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மகக்ள்

தமிழ் வேளாளர், தமிழ்ப் பறையர், தெலுங்கர், படகர், கோதர், தோடர், இருளர், குறும்பர் வய நாட்டுச் செட்டிமார், பனியர், சிறுபான்மை வெள்ளையர் ஆகியோரே நீலகிரி மலைமீது வாழ்கின்றனர்.

பழங்குடி மக்கள் :

நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலை நாட்டிலிருந்தும், இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பழங்குடி ஆராய்ச்சி (Anthropology) க்காகப் பலர் இங்கு வந்து கூடிய வண்ணமிருக்கின்றனர். இந்திய நாட்டுப் பழங்குடி மக்களைப்பற்றிக் கூறும் எந்த நூலும், தோடர்களைப் பற்றிக் குறிப்பிடாமலிருப்பதில்லை. தோடர்களைத் தவிர, நீலகிரியில் வாழும் மற்ற இனத்தவரெல்லாம் ஓரளவு நாகரிகம் பெற்று வருகின்றனர். ஆனால் தோடர்கள் மட்டும் இயற்கையோடு படிந்த வாழ்க்கையிலேயே இன்பம் காண்கின்றனர்.

பழங்குடி மக்களைப்பற்றி, எல்லா நாடுகளிலும் பேசப் படுகிறது. விஞ்ஞான நாகரித்தின் அடிப்படையில் இயங்கும் நகர வாழ்வைவிட, காடுகளிலும் மலைகளிலும் கவலையற்று வாழும் இயற்கை வாழ்வே உயர்ந்த தென்றும் பேசப்படுகிறது. பழங்குடி மக்களுக்கு அணுக்குண்டைப் பற்றியோ, நீர்வளிக் குண்டைப் பற்றியோ, பறக்கும் குண்டைப் பற்றியோ தெரியாது , கவலை கிடையாது. அரசியல், பொருளியல், சமூகவியல், தொழில் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றைப் பற்றியும் அவர்கள் கவலைப் படுவதில்லை, நாளை உணவுக்கு என்ன செய்வது? என்று கவலையோடு கண்துயிலச் செல்லும் இழிநிலை அவர்களிடம் இல்லை. இயற்கை அளிக்கும் வளத்தைப் பகுத்துண்டு பொது உடமை வாழ்வு வாழ்கின்றனர். பண்டித நேரு, பழங்குடி மக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-