பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

மாணவர்களுடைய உடல் நலத்தை நல்ல முறையில் கண்காணிக்க ஒரு மருத்துவ மனையும் உள்ளது. அம்மனையில் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் இருந்து பணிபுரிகிறார். 55 படுக்கைகள் அம்மருத்துவ மனையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் கருத்தோடு கவனிக்கப்படுகிறது. மாணவர்களின் எடை, உயரம் முதலியன யாவும் திங்கள்தோறும் கணக்கிடப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. நாள் தோறும் சோதனையிடப்பட்ட சீரிய உணவே எல்லாருக்கும் அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் ஒரு மாணவன் 24 மணி நேரத்திற்குமேல் தங்கியிருக்க நேரிட்டால், அச் செய்தியைப் பள்ளி நிர்வாகிகள் பெற்றோருக்கு அறிவித்து விடுகின்றனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் மாணவனின் உடல் நல முன்னேற்றம், வாரந்தோறும் பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படும். மாணவனின் உடல் நலத்தைப் பற்றி வினவும் பெற்றோருக்கு உடனுக்குடனே முடங்கல் மூலம் அக்கறையோடு நிலைமை அறிவிக்கப்படும். மிகவும் நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் உதகமண்டலத்திலுள்ள புனித பார்த்தலோமி மருத்துவமனை {St. Bartholomews Hospital) யில் சேர்க்கப்படுவர். அப்போது ஏற்படும் செலவினத்தைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி மருத்துவமனையில் செய்யும் சிகிச்சைக்குப் பணம் கிடையாது. எக்ஸ்-ரே படம் பிடிப்பதற்கும், அறுவை மருத்துவத்திற்கும், டானிக்குகளுக்கும், விலையுயர்ந்த மருந்துகளுக்குமான பணத்தைப் பெற்றோர்கள் அளிக்க வேண்டும். நீலகிரி மாவட்ட மருத்துவ அதிகாரி, (District Medical Officer) இப் பள்ளியின் மருத்துவ ஆலோசகராக எப்பொழுதும் இருப்பார். இப் பள்ளிக்கென்று தனிப்பட்ட பல் மருத்துவர் (Dental Surgeon) ஒருவர் இருக்கிறார். மாணவர்களுடைய பற்களின் நலம் நன்கு கவனிக்கப்படுகிறது. இதற்கென்று ஆண்டுதோறும் ரூ. 5 கட்டணமாகப் பெறப்படுகிறது.