பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழக வரலாறு -கரிகாற் பெருவளத்தான்

மருவிளங்கு தமிழ்மொழியின் மருங்கு
எழுந்தது என விளங்கும்
திருவிளங்கு வள்ளுவனார் திருக்குறள் கண்டவர்
அடியைச் சிரமேற் கொள்லாம்.

என்ற பாடலை எல்லோருமாகப் பாடுவோம்.

1934-இல் பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அவர் தந்த பயிற்சியின் துணையால் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களை நானே படிக்கத் தொடங்கினேன். 1935-இல் "காவிரி" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய'தமிழ்ப் பொழி'லுக்கு அனுப்பினேன். அது வெளிவந்த பிறகே ஆசிரியர்க்குத் தெரியும். இதுவே என் எழுத்துப் பணியின் தொடக்கம் ஊரில் "வாகீச பக்த ஜன சங்கம்" என்ற பெயரில் ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது. அது மேலே கூறிய திருக்கோயில் திருவிழா நடைபெறும் தைத் திங்களில் பத்து நாட்கள் உபயச் சொற்பொழிவு நடத்தி வந்தது. ஒளவை அவர்கள் பங்கு கொண்டதும், அது புதுநடை போடத் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் உள்ளிட்ட சமயப் புலவர்கள் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள். அவர்கள் பேசியன எல்லாம் கேட்ட எனக்கும் "நாமும் ஏன் பேசக் கூடாது" என்ற உணர்வு எழவே, ஆசிரியர் அறிவுரையோடு இளைஞர்கள் முன்னிற்கும் கடமைகள் என்ற தலைப்பில் பேசினேன். அதுவே என் முதற் பேச்சு.

எங்கள் ஊரில் "பானு கலி மாணவர் தமிழ்ச் சங்கம்" என்ற பிறிதோர் அமைப்பும் இருந்தது. இராமாயணத்தை ஆழ்ந்து படிக்காமலே பட்டிமன்றம், வழக்காடு மன்ற மேடைகளில் நின்று கொண்டு வெறும் சொல் சாலம் காட்டுவார் போல் அல்லாமல் ஆழமாகப்