48
இதனை, 'ஒண்டொடி' 'பைந்தொடி' 'பொற்றொடி' என்னும் சொற்கள் விளக்கும். காதில் மகரக்குழை அணிந்திருப்பர். முடக்கு என்னும் நெளிமோதிரம் அக்காலத்தில் அணியப்பட்டது என்பது நெடுநல் வாடையினின்றும் விளங்குகிறது. இக்காலத்திலும், மணிகள் வைத்துப் பொன்னால் செய்யப்பட்ட நெளிமோதிரம் அணியப்படுகிறது. முடமோசியார் பாடலொன்றில் காணப்படும்,
'ஈகை யரிய இழையணி மகளிரொடு
சாயிற் றென்ப வாஅய் கோயில்'
என்ற அடிகள், அக்காலத்தில் மணமான பெண்டிர் மங்கலநாண் அணிந்திருந்தனர் என்று கருத ஏதுவாயுள்ளன.
பெண்கள் காலில் அணியும் சிலம்பு பொன்னாலாயது. நடக்கும்போது ஒசையுண்டாவதற்காக, விலையுயர்ந்த மணிகள் அதன் உள்ளே பரலாக இடப்பட்டன. கண்ணகியினது சிலம்பின் பரல் மாணிக்கம் என்பதையும், கோப்பெருந்தேவியினது சிலம்பின் பால் முத்து என்பதையும் வழக்குரை காதை விளக்கா நிற்கும்.
ஆடல் பாடல்களிற் சிறந்தவர்களாகிய மாதவி தலை முதல் கால்வரையில் பல்வகை அணிகலன்களை அணிந்திருந்தாள். அவற்றுள், பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, காற்சரி என்பன காலணிகள். சித்திரவளை, மணிவளை, பவளவளை முதலியவை வளைகளிற் சில வகைகளாகும். கழுத்தில் வீரச் சங்கிலி, ஞாண், சவடி, சரப்பளி, முத்தாரம் முதலியன அணியப்பட்டன. தெய்வவுத்தி, வலம்புரி, பூரப்பாளை, வடபல்லி, தென்பல்லி என்பன தலைக்கோலங்களாக விளங்கின. இன்னும் ஈண்டுக் கூறா தொழிந்தவை பல.
வறுமை காரணமாக, பழுமரந்தேரும் பறவைபோல அரசர்களையும் வள்ளல்களையும் நாடிச்சென்ற பாணர்கள்,