பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பழந்தமிழர் கொண்டனர். 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரஸ் பிறவே 'என்பது தொல்காப்பியம். மக்களினத்துள் அடங்காமல், கடவுளாகிய முதற் பொருளுமாகாமல் இரண்டற்கும் இடைப்பட்ட நிலையில் தெய்வங்கள் காணப் படுகின்றன. இவை மக்களுயிர் போல மனவுணர்வும் வினை செய்தலும் இன்ப துன்ப நுகர்ச்சியும் உடையவாய்ப் பிறத்தலும் இறத்தலும் செய்வன. இவற்றின் செயல் முறையும் வாழ்க்கையும் மக்களுயிரின் மேனிலையில் உள்ளன. "தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி" மக்கள் இனத்தன அல்ல வாகலின் "இவ்னெ அறியும் அந்தம் நமக்கு இல" என்றும், சொல்லுலகில் “உயர்திணை மருங்கின்பால் பிரிந்து இசைக்கும்” என்றும் ஆசிரியர் தொல்காப்பியர் வகுத்துரைக்கின்றார்.

பழந்தமிழர் சொல்லுலகை உயர்திணை அஃறிணை எனக் கொண்டாற் போலப் பொருளுலகைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்துக்கொண்டனர். இப்பகுதியுள் வாழ்ந்த மக்கள் முறையே குன்றவர், ஆயர், வேளாளர், பரதவர், எயினர் எனக் குறிக்கப்பெற்றனர். அவர்களைத் திணை நிலை மக்கள் என்பது வழக்கம். அவரவர் வாழ்க்கைக்குரிய உணவு, தொழில் முதலியன தனித்தனியே உள்ளன. அவற்றோடு சமயவொழுக்த்தைக் கூட்டி மேலே குறித்த தெய்வங்களையும் ஒவ்வொரு பகுதிக்கும் உரிமை செய்துள்ளனர். குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு மாயவனும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் தெய்வமாவர். இவர்கட்கு நாட்பூசனையும் விழாவும் வழிபாடும் செய்வது சமய வொழுக்கமாகிறது. கடவுள் என்பது இத்தெய்வ வகைகட்கு மேற்பட்டு நின்று எல்லாம் முழு