பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 தமிழர் நாட்டுப் பாடல்கள் நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன. நமது கிராம வாழ்க்கை பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவினைகளால், முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது. உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயம் என்று நினைத்துவிடக் கூடாது. கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன. ஊர்க் கோவில்களுக்கு ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது. அக்கோவிலை நிர்வாகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள் மேல் வர்க்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன. நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை. சிலருக்குக் கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன. இவர்களில் ஊர் வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன. உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும். வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும் பல போர்கள் நடப்பதற்கும் அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக்கிராம அமைப்புதான் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைவிக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும்.இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர். நெசவு முதலிய தொழில்களும் குடிசைத்தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன. அயலூர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டி