பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காதல் 235

இந்திர சாலக் காரி

என்ன மறந்திட்டியே!

பூவோசரம் பூவே

பொழுதிருக்கப் பூத்த பூவே

நா மோந்த பூவாலே

நான் ஒரு சொல் கேட்டேன்

கம்மங் கதிரறுக்க

கருத்தூருணி தண்ணிருக்க

புங்க நிழலிருக்க

புருஷன் மட்டும் என்ன பயன்?

தூத்துக்குடி ஓரத்தில

தொன்னூர் கட வீதியில

போட்டுட்டுத் தேடுறாளே

பொன் பதித்த மோதிரத்தை

கருத்தக் கருத்த பிள்ளா

கைமசக்கம் தந்த பிள்ளா

என் உசிரக் குறைச்ச பிள்ளா

உருவிக்கோடி மோதிரத்தை

வேப்ப மரத்துக்கிளி

வித விதமாப் பேசுங்கிளி

நான் வளர்த்த பச்சக்கிளி

நாளை வரும் கச்சேரிக்கு

வேப்ப மரத்தோரம்

வெட்டரிவாள் சாத்திவச்சேன்

வேப்பமரம் பட்டதிண்ணு

விட்டதடி உன்னாசை

பாக்கப் பகட்டுதடி

பல்வரிசை கொஞ்சுதடி

கேக்க பயமாயிருக்கே

கிளிமூக்கு மாம்பழமே!

வெள்ள வெள்ள சீலைக்காரி

வெள்ளரிக்கா கூடைக்காரி

கோம்ப மலை வெள்ளரிக்கா

கொண்டு வாடி தின்னுபாப்போம்

தங்கத்துக்கு தங்கம் இருக்க

தனித் தங்கம் இங்க இருக்க

பித்தளத் தங்கத்துக்கு

பேராசை கொண்டாயடி!