பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23. பாரியும் மாரியும்

பழந்தமிழ் நாட்டில் வரையாது பொருள் வழங்கும் வள்ளலார் பலர் வாழ்ந்து வந்தனர். குறுநில மன்னராய அப்பெருந்தகையார் அறிஞரையும் வறிஞரையும் ஆதரித்து என்றும் வாடாத செஞ்சொற் பாமாலை பெற்றார். அன்னவருள் தலைசிறந்தவன் பறம்புமலைக் கோமானாகிய பாரி. இயற்கை வளஞ்சான்ற பறம்புமலை நாட்டில் நெல்லும் கனியும், தேனும் கிழங்கும் நிரம்பக் கிடைத்தமையால் குடிகள் கவலையற்று வாழ்வாராயினர்.

பசியும் பகையும் இன்றி, வசியும் வளனும் பெருகிய அம்மலையின்மீது அமைந்த அரண்மனையில் கருணையின் வடிவமாக வீற்றிருந்தான் பாரி: அற்றார்க்கும் அலந்தார்க்கும் அவன் உற்ற துணைவன்; பசிப் பிணி என்னும் பாவியின் பெரும் பகைவன். கங்கு கரையற்ற அவ் வள்ளலின் கருணை, மன்னுயிர் முதலாகப் புல்லுயிர் ஈறாக உள்ள அனைத்துயிரையும் ஆதரிப்பதாயிற்று. ஒரு நாள் பாரி, தன் அழகிய தேர்மீது ஏறி, நாட்டு வளங்காணப் புறப்பட்டான்; செல்லும் வழியில் ஒரு முல்லைக்கொடியைக் கண்டான்; குறுகிக் கிடந்த அதன் நிலை கண்டு மனம் உருகினான்: தழைத்துச் செழித்துப் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பின்றிக் குழைந்து வாடிய கொடியின் துயர் கண்டு வருந்தினான்; அப் புல்லுயிரின் துன்பத்தைப் போக்கக் கருதித் தன் பெரிய தேரை