பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியார் பாட்டின்பம்

259


புவிமிசை என்றுமிருப்பேன்' என்று தமிழன்னை தன் ஆற்றாமையை அறிவித்துத் தமிழ் மக்களைத் தட்டித் தேற்றி எழுப்புகின்றாள்.

இங்ஙனம் தமிழ்த் தாயின் வாய்மொழியாகப் பாரதியார் எழுதியுள்ள பாட்டின் கருத்து அறிந்து போற்றுதற் குரியதாகும். மேலை நாடுகளில் நாள்தோறும் நலமுற்றோங்கி வளரும் நவீனக் கலைகள் தமிழ்மொழியில் இல்லை என்பது உண்மையே. அக்குறைபாடறிந்து தமிழன்னை வருத்தமுற்றாளேனும் சீற்றமுற்றாளில்லை. மேலை நாட்டுக் கலைகளிலமைந்த அரும்பொருள்களை எடுத்துரைக்கும் திறம் தமிழ் மொழிக்கில்லை என்றும், அத்திறமின்மையால் இனி மெல்லத் தமிழ்மொழி இறந்துபடுமென்றும், விரிவிலா அறிவினார் கூறும் வசைமொழி கேட்டுத் தமிழ்த்தாய் சீறுகின்றாள்; அருந்தமிழின் ஆற்றலறிந்தவர் எவரும் அவ்வாறு உரை செய்யாராதலால், 'கூறத் தகாதவன் கூறினன்' என்றாள். தமிழ் மொழியின் நீர்மை உணராத முழு மகனே அவ்வாறு உரைக்கத் துணிவானாதலால், அந்தப் பேதை உரைத்தான் என்று அன்னை அவனைச் சுட்டி இகழ்ந்துரைத்தாள். ஆயினும், அத்தீய வெஞ்சொல் அன்னையின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்கின்றது. தகவிலார் கூறும் வசையினைத் தீர்த்து இசையினை நல்குமாறு அருந்தமிழ் மக்களை அன்னை வருந்தி அழைக்கின்றாள்.

ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளையறிந்த மாணவர் கடமையைப் பாரதியார் பண்புறக் கூறுகின்றார்; பிற நாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். அக்கலைகளிலமைந்த புதிய