பக்கம்:தமிழின எழுச்சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 165

இவர், இக்கால், தம் பழைய வடமொழிப்பெயரை, முன்னில்லாத சமசுக்கிருத ஒலிப்புடனும் எழுத்துகளுடனும் வைத்துக்கொண்டதுடன், தம்மைப் பிறர் அவ்வாறே அழைக்க வேண்டும் என்றும் அவாவுகிறார் என்னே ! கால, இட பொருள் நிலைகளால் ஏற்படும் மாந்த மன மாற்றங்கள்!

இக்கால், பொதுநலவுணர்வும், ஈடுபாடும், திரைப்படக் கலைக் கவர்ச்சியுடன் உலா வருவதைப் பார்க்கிறோம். உண்மையாகவே மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற எண்ணம், இலக்கம் பேர்களில் மிகச் சிலருக்கே உள்ளது. மற்றபடி, பலரோ, அதை வருவாய்க்கும் வாழ்க்கைக்கும், தம் பெயர் விளம்பரத்திற்கும் (இதுவேறு; புகழ் வேறு) ஒரு வணிக வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கின்றோம். இதற்கு இன்றுள்ள அரசியல் நிலைகளும் மிகப் பொருத்தமாக உள்ளன. அரசியல் வழியாகக் கிடைக்கின்ற ஆரவார விளம்பரத்தனங்களையும், கட்சிகள் வழியாகக் கிடைக்கின்ற வருவாய்களையும் பார்த்து, அவர்கள் அயர்ந்தும் வியந்தும் போய், இச் செயல்கள்தாம் உண்மையான பொதுத்தொண்டுக்குரிய வழிகள் என்று மயங்கித் தாங்களும் அவற்றில் தாவிக்கொள்கிறார்கள். இந்நிலை இற்றை நாளில் அவர்களை வேறு எதிலும், அஃதாவது முறையான வாழ்வுப்பாடுகள் எதிலும் நாட்டமற்ற நிலையில் கொண்டுபோய் விட்டுள்ளது, எனில் வியப்பில்லை!

எனவே, உண்மையான உணர்வுடன், நேர்மையான மனத்துடன், மொழி, இன நாட்டுத் தொண்டு செய்ய விரும்பித் தங்களை முன்வைத்துக்கொள்ள விரும்பும் இளைஞர்கள், முதலில் நம் நாட்டு மக்களுக்குற்ற இடர்ப்பாடுகள், தாழ்ச்சி, வீழ்ச்சி நிலைகள் என்னென்ன என்பதை வரலாற்று அடிப்படையில், வேறு மொழி இன, நாட்டு மக்களின் வரலாற்று நிலைகளுடன் பொருத்திப் பார்த்து, ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பின்னர் அந்நிலைகளில் நம் மக்களை ஈடேற்றுவதற்குரிய கொள்கைகள் எவை என்பதை, அரசியல் அடிப்படையில் அல்லாமல் தொண்டு அடிப்படையில் உய்த்துணர்ந்து, தங்களுக்குத் தங்கள் அளவில், ஒரு தெளிவை முதலில் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அதன் பின்னரே, தாம் தேர்ந்து கொண்ட கொள்கைகள், செயற்பாடுகளுக்குரிய அல்லது அவற்றுக்கு மிக நெருக்கமான கோட்பாடுகளுடன், உண்மையாக, மக்கள் நலன்களை முன்வைத்துப் பாடாற்றக்கூடியனவாகக் கூறிக்கொள்ளும் இயக்கங்களுள் பெரும்பான்மையும் சரியாக உள்ள ஓர் இயக்கத்தைத் தேர்ந்து தெளிய வேண்டும்.