பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪. மங்கையர் முதியோர் எழுக!

ஒருவானில் பன்னிலவாய்
    உயர்தமிழ்ப்பெண்களெலாம்
        எழுக! உங்கள்
திருவான செந்தமிழின்
    சிறுமையினைத் தீர்ப்பதென
       எழுக! நீவிர்,
பெருமானம் காப்பதற்கு
    வாரீரேல் உங்கள்நுதற்
       பிறையே நாணும்!
மறுமலர்வாய்த் தாமரையும்
    கனியுதடும், நன்னெஞ்சும்
         வாட்டம் எய்தும்! 16

நகர்நோக்கிப் பசுந்தோகை
    நாடகத்து மாமயில்கள்
        நண்ணி யாங்குப்
பகர்கின்ற செந்தமிழின்
    பழிநீக்கப் பெண்களெல்லாம்
       பறந்து வாரீர்!
மிகுமானம் காப்பதற்கு
    வாரீரேல் வெண்ணிலவு
       முகஞ் சுருக்கும்
மகிழ்வான மலர்க்கன்னம்
   வாய்மையுளம் வாட்டமுறும்
       மலர்க்கண் நாணும். 17

தண்டூன்றும் முதியோரே!
    தமிழ்த்தொண்டென்றால் இளமை
         தனை எய்தீரோ?
வண்டூன்றும் சிற்றடியால்
    மண்டுநறும் பொடிசிதறும்
        பொதிகை தன்னில்
பண்டூன்றும் திருவடியால்
    பச்சைமயில் போல்வந்து
        தமிழர்க் காவி
கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய்
    கொண்டகுறை தவிர்ப்பதற்குக்
        குதித்து வாரீர்! 18