பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழியக்கம்

காக்கை “கா” என்றுதனைக்
    காப்பாற்றச் சொல்லும்! ஒரு
        கருமு கில்தான்,
நோக்கியே “கடமடா“
    என்றேதன் கடனுரைக்கும்!
        நுண்கண் கிள்ளை
வாய்க்கும் வகை ‘அக்கா’ என்
    றழைத்ததனால் வஞ்சத்துப்
       பூனை “ஞாம் ஞாம்“ (நாம்)
காக்கின்றோம் எனச் சொல்லக்
    கழுதைஅதை “ஏ“ என்று
       கடிந்து கூறும். 54

“கூ“ எனவே வையத்தின்
    பேர் உரைத்துக் குயில் கூவும்.
       “வாழ் வாழ்“ என்று
நாவினிக்க நாய் வாழ்த்தும்
     நற்சேவல் “கோ“ என்று
        வேந்தன் பேரைப்
பாவிசைத்தாற் போலிசைக்க,
     வருங்காற்றே “ஆம்“ என்று
         பழிச்சும்! இங்கு
யாவினுமே தமிழல்லால்
     இயற்கைதரும் மொழிவேறொன்
        றில்லை யன்றோ 55