இந்த அகராதி தமிழ் ஆர்வலர், மொழி வல்லுநர், கலைத் துறையினர் எனப் பல்துறையாளருக்கும் அரும்பெரும் விருந்தாக அமைந்திருப்பதனைப் பயில்வோர் எளிதில் உணர்ந்து பயன்பெறுவர் என்பது எம் எண்ணம்.
தமிழ் உலகுக்கு இந்நிறுவனம் இந்த அகராதியினை வெளியிடுவதில் பெரிதும் பெருமை கொள்கிறது. பல்கலைக் கழக மானியக்குழுத் திட்ட ஆய்வுப்பணியில் விளைந்த இந்தச் சொற்கோவைப் பெட்டகத்தினை உருவாக்கிடத் துணைநின்ற திட்ட நோக்காளர் திருமதி ஜெ. சரசுவதி அவர்கள் இந்நேரத்தில் நினைவுகொள்ளத்தக்கவர்.
இந்தப் பணி முயற்சியில் துணைநின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றி என்றும் உண்டு.
இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு தம் தனிப்பட்ட அக்கறையையும் காட்டிவரும் நிறுவனத் தலைவரும் தமிழக அரசின் முதல்வருமான மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழுலகம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழ்ப்பணிகளுக்கு ஆற்றுப்படுத்தி வரும் மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துவரும் தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு க. முத்துசாமி இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி.
இந்நூல் வெளியீடு தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்த நிறுவனப் பணியாளர்கள், கணிப்பொறியாளர் திருமதி எ.ம. லட்சுமி ஆகியோருக்கும் இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் அச்சகத்தாருக்கும் பாராட்டுகள்.
இயக்குநர்