பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலாசிரியர் அறிமுகம்

பிறப்பு : 27-8-1916

74-அகவையைக்கடக்கும் இந்நூலாசிரியர் பி.எஸ்சி., எல்.டி,வித்துவான், பி. ஏ., எம்.ஏ., பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் (1942-1950); - பத்து ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் துணைத்தலைவராகவும் (1950-- 60), பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978-இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978-பிப்ரவரி-1979. ஜுன்) கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச். டி) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல்வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர ஆசிரியம் (5), இலக்கியம் (12), சமயம் (25), திறனாய்வு (12), அறிவியல் (15), ஆராய்ச்சி (5), வாழ்க்கை வரலாறு (14) என்று 88 நூல்களின் ஆசிரியர்.

இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசின் பரிசுகளும்; அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும்-ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இவர்தம் அறிவியல் - பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 'அருங்கலைக்கோன்' என்ற விருதையும், பண்ணுருட்டி வைணவ சபை இவரது சமயப் பணியைப் பாராட்டி 'ஸ்ரீ சடகோபன் பொன்னடி' என்ற விருதையும், தமிழக அரசு திரு.வி,க, விருதையும் வழங்கிச் சிறப்பித்தன. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்புகளாம்.