பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

வல்லிக்கண்ணன்


அதன் ஏழாவது இதழ் 'இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ்' என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய' பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன.

“நா. விச்வநாதன் கவிதைகள்-4 பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள்.

சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் நல்ல விருந்தாக அமைந்திருந்தது.

அதன் பிறகு சுவடு வெகுகாலம் நீடித்திருக்கவில்லை. விரைவிலேயே ஒரு அறிவிப்பு தந்துவிட்டு, அதன் பிரசுரத்தை நிறுத்திக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

'சுவடு' நெடுங்காலம் வாழ்ந்து வளர்ந்திருக்க வேண்டிய சிறு பத்திரிகை. அதைப் போன்ற ஒரு இலக்கியப் பத்திரிகை இன்றுகூடத் தேவைதான். சுவடு இதழ்களைத் திருப்பிப் பார்க்கிற போதெல்லாம் இந்த எண்ணம் எழத் தவறுவதில்லை.