பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

145


‘பாலம் உங்கள் ஏடு. ஆயிரக்கணக்கில் அது விற்க வேண்டாம். பல நூறுகள்கூட வேண்டாம். சில நூறுகளே போதும். தமிழகத்தின் எந்த சின்ன இலக்கிய இதழின் பலமுமே இருநூறுதான் என்பது அதன் வரலாறு. ஆறு கோடி மக்களின் இலக்கிய பலம் இருநூறு பேர்தானா? ஆம். இன்று நேற்றல்ல, முப்பதாண்டுகளாகக- இருநூறு நிலையான சந்தாக்கள்தான். எல்லா இலக்கியப் பத்திரிகைகளையும் வாங்குகிற அதே நூறு பேர் தங்கள் அடுத்த தலைமுறையிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழில் புதிதாய்ச் செய்யப்போனவர்களின் பலம்! இது பெருக வேண்டும். ஆயிரமாவது சேரவேண்டும்' என்று பிரகாஷ் விருப்பம் தெரிவித்தார்.

'பாலத்தின் முதல் நோக்கமும் முப்பத்திரண்டாவது நோக்கமும் இலக்கியம் ஒன்றே புதுசோ பழசோ எதுவாயினும் அதன் நோக்கம் இலக்கியமே. உங்களுக்காக உங்களுடன் கலந்து பாலம் நிறைய செய்ய விருக்கிறது. தேடவிருக்கிறது. கண்டுபிடிக்கவிருக்கிறது. அந்தப் பணியில் பக்குவம் பெற உங்களையும் அழைக்கிறது. அதைச் செய்யும் இதைச் செய்யும் என்று சொல்லில் சொல்ல ஒன்றுமில்லை. நமக்கு இறந்த காலம் தெரியும். லட்சியங்களின் கண்கூசும் ஒளியும் நமக்குப் பழக்கமே. நிகழ்காலத்தின் அலுப்பும் வறட்சியும் எதிர்காலத்தின் ஒட்டாத் தன்மையும் எட்டாத் தன்மைகளும் நாம் அறிந்தே இப்பாலத்தில் வந்து நிற்கிறோம். செயலுக்கு உதவும் கரங்கள் போதும். ஆரவாரமில்லாமல் தொடரும் 'பாலம் என்று பிரகாஷ் அறிவித்தார்.

இரண்டுக்கு மேல் தொடவோ தொடரவோ முடியவில்லை அவரால். ‘பாலம்' வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. மதுரையிலிருந்து வெளிவந்தது பாலம்.

'திருச்சி வாசகர் அரங்கு' என்ற அமைப்பைச் சேர்ந்த இலக்கிய ரசிகர்கள் மாதம்தோறும் திறனாய்வுக் கருத்தரங்கு நடத்தி இலக்கியப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.

தமிழில் அப்போது வந்த சிறு பத்திரிகைகளின் சாரமற்ற தன்மையையும் பக்க வீணடிப்புகளையும் காணச் சகிக்காமல், தரமான ஏடு ஒன்றை வெளியிட ஆசைப்பட்டார்கள். 'இன்று' தோன்றியது. 1972-ல். பத்துப் பேர் சேர்ந்து செலவைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அப்படியும் மூன்று இதழ்கள்தான் கொண்டுவர முடிந்தது அவர்களால்.