பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26. ஒரு விளக்கம்


மறுமலர்ச்சி இலக்கியம் என்ற பிரயோகம் 1930 களிலும் 40 களிலும் தமிழ்நாட்டில் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தது.

'மணிக்கொடி' தமிழ்நாட்டின் முதலாவது மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகை என்ற மதிப்பை அடைந்திருந்தது. மணிக்கொடி எழுத்தாளர்கள் தங்களை 'மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்' என்று பெருமையுடன் அறிவித்தார்கள்.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மகாகவி கப்பிரமணிய பாரதியார். அவர் படைப்பிலக்கியத்தில் புதிய சுவை, புதிய பொருள், புதிய வளம், புதிய சொற்கள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டு எழுதினார். எளிமையும் இனிமையும் சேர்த்து மொழியை உயிரும் உணர்வும் உள்ளதாக ஆக்கினார். பழகு தமிழ்ச் சொற்களைப் படைப்புகளில் கலந்து எழுத்துக்குப் புதிய அழகும் வேகமும் தந்தார்.

பாரதியாருக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் இலக்கியம் பண்டிதர்களின்- மெத்தப் படித்த மேதாவிகளின்-தனி உடைமையாகக் கருதப்பட்டு வந்தது. பண்டிதர்கள் கம்பனும் திருவள்ளுவரும்தான் தமிழ் மொழியின் 'கதி' என்றும், கம்பராமாயணமும் திருக்குறளும்தான் மொழிக்கு வளம் அளிக்கும் இலக்கியம் என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் குறுகிய நோக்கிற்கு மாற்று கண்டவர் பாரதியார். எனவே அவரை இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்றும் 'பொன் ஏர் பூட்டிய முதல்வன்' என்றும், தங்களுக்கு முன்னோடி என்றும் மணிக்கொடி எழுத்தாளர்களும் அவர்கள் காட்டிய பாதையில் முன்னேற முற்பட்ட மறுமலர்ச்சி எழுத்தாளர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

வெகுநாட்கள் வரை பண்டிதர்கள் பாரதியாரைக் கவிஞராகவும், அவருடைய படைப்புக்களைக் கவிதைகளாகவும் அங்கீகரித்தாரில்லை. அதேபோல மறுமலர்ச்சி இலக்கியத்தையும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் பழிப்பதையும் பரிகசிப்பதையுமே தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள்.