பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

வல்லிக்கண்ணன்


‘தமிழுக்குக் கதி கம்பராமாயணமும் திருக்குறளும்தான் என்ற கருத்தைப் பிரசாரம் செய்து கொண்டிருந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர் ரா. பி. சேதுப்பிள்ளை. அவர் மறுமலர்ச்சி இலக்கியப் போக்கை எதிர்த்தவர்களுள் ஒருவராகவும் இருந்தார். 'மறுமலர்ச்சி என்று சொல்வதே தவறானது. ஒருமுறை மலர்ந்தது மாளுமே தவிர மறுபடியும் மலராது. எனவே, மறுமலர்ச்சி எனக் கூறுவது ஆகாசத் தாமரை என்பது போலாம். அவ்விதம் எதுவும் கிடையாது என்பதனால், மறுமலர்ச்சி என்ற பெயரால் இன்றைய எழுத்தாளர்கள் செய்து கொண்டிருப்பது தமிழ் மாள்ச்சிதான்-தமிழைச் சாகடிக்கிற வேலைதான் என்று அவர் முழக்கம் செய்து வந்ததை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பண்டிதர்கள் இலக்கியம் என்று குறிப்பிட்டு மொழியின் வளர்ச்சியைத் தேங்க வைத்து, வளம் குறையச் செய்து கொண்டிருந்தார்கள். இது புராதனப் போக்கு.

இதற்கு மாறுபட்ட வளமான போக்கு மறுமலர்ச்சி இலக்கியப் பணி.

செய்யுள்கள் ( பாடல்கள் ), காவியங்கள் மற்றும் அவை பற்றிய விரிவுரை, விளக்கங்கள், ஆய்வுரைகள்தான் இலக்கியம் ஆகும் என்று பண்டித மனப்பான்மை உடையவர்கள் சாதித்துக் கொண்டிருந்தார்கள். 'இலக்கியப் பத்திரிகைகள்' இத்தகைய விஷயங்களையே பிரசுரித்து வந்தன.

இனிய எளிய கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களும் இலக்கியம் ஆக முடியும்-ஆகும்-என்று வற்புறுத்தினார்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள். அத்தகைய படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

ஆற்றலும் ஆர்வமும் பெற்ற இவ்வகைப் படைப்பாளிகளுக்குச் சிறு பத்திரிகைகளே உரிய மேடைகளாகத் துணை நின்றன.

கால ஓட்டத்தில், மறுமலர்ச்சி என்ற சொல்லின் மீது அரசியல் சாயம் பூசப்பட்டது.

சுயமரியாதை, பகுத்தறிவு வாதம், தமிழ் இன உணர்வு முதலியவற்றைப் பிரசாரம் செய்துவந்த திராவிடக் கட்சியின் மேடைகளிலும் ஏடுகளிலும் சி. என். அண்ணாதுரை தமிழ் இன மறுமலர்ச்சி, தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சி, தமிழர் சமுதாய மறுமலர்ச்சி என்றெல்லாம் நாவலிக்கலானார். 'எது மறுமலர்ச்சி?' என்று ஒரு சிறு புத்தகமும் எழுதி, கொள்கை முழக்கம் செய்தார்.