பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46. இலக்கிய இதழ்கள்


சமூகப் பார்வையோடு எழுதப்படுகிற முற்போக்குக் கவிதைகள் எழுதுவோர் அதிகரித்து வருகிற காலத்திலேயே, தனிமனிதப் பார்வையுடனும் உள்ளத் தேடல் ஈடுபாட்டுடனும் தூய இலக்கிய உணர்வோடு கவிதைகள் எழுதுகிறவர்களும் வளர்ந்து வருகிறார்கள்.

வெறும் இலக்கியம் என்று மட்டுமல்லாது கலை, ஓவியம், நாடகம், பொருளாதாரம், சமூகப் பிரச்னைகள் மற்றும் மனிதரைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அந்நோக்குடன் செயல்படுகிற சிறு பத்திரிகைகள் பல உள்ளன. அதே சமயத்தில் தனி இலக்கியத்துக்காக (ப்யூர் லிட்டரேச்சர், ஸீயஸ் லிட்டரேச்சருக்காக) என்று மட்டுமே நடத்தப்பட்ட, படுகிற இதழ்களும் உள்ளன.

இவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே கவனிக்கலாம்.

ழ-கவிதை மாத ஏடு. ஆசிரியர் : ஆத்மாநாம்.

‘எழுபதுகளின் துவக்கத்தில் வெளிவந்து கொண்டிருந்த கவிதைகளின் போக்குகளிலிருந்து மிகச்சில கவிஞர்களே தங்களது தனித்துவத்தையும் புதியதோர் எதிர்க் குரலாய் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய கவிதைகள் கருப்பொருளிலும் வெளிப்பாட்டுத் திறத்திலும் சிறப்புற்று இருக்கின்றன. தலைமுறை இடைவெளி இன்றைய கவிதைகளில் காணக் கிடைக்காத ஒன்று. புதிய உள்ளோட்டத்துடன் வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளையும் தத்துவ தரிசனங்களையும் இவை முன் நிறுத்துகின்றன. இத்தகைய கவிதைகளை ழ தனது இருபத்திநான்கு இதழ்களில் அளிக்க முயற்சித்துள்ளது. நவீன உருவத்தோடும் புதிய உள்ளடக்கத்தோடும் செறிவுடனும் கூடிய கவிதைகள் புதியவர்களிடமிருந்து நிறைய வர வேண்டும்.‘

இப்படி ‘ழ‘ தனது 24-ம் இதழில் (கடைசி இதழ்) அறிவித்துள்ளது.

ஞானக்கூத்தன், ஆத்மாநாம் பிரம்ம்ராஜன், கலாப்ரியா, கல்யாண்ஜி காஸ்யபன், தேவதச்சன், ஆர்.ராஜகோபாலன் முதலிய கவிஞர்களும்,