பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

275


செ. யோகநாதன், வண்ணதாசன், வல்லிக்கண்ணன், கர்ணன், பிரபஞ்சன், கார்த்திகா ராஜ்குமார், பாவண்ணன் முதலிய படைப்பாளிகளின் கதைகளை அரும்பு இக்கால கட்டத்தில் பிரசுரித்தது. மற்றும் மசாலாப் பத்திரிகைகளில் வருகிற கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, புதுமையான- பரிசோதனை ரீதியான-கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டது.

தரமான கவிதைகளைப் பிரசுரிக்க முயன்றது. தமிழன்பன், ஆத்மாநாம், பாப்ரியா, நீலமணி, ப்ரதிபா ஜெயச்சந்திரன் முதலியவர்களின் கவிதைகள் வந்துள்ளன. பிறமொழிக் கவிதைகளின் தமிழாக்கமும் அதிகமாகவே பிரசுரிக்கப்பட்டது. பிரம்மராஜன் பல நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புகளைத் தமிழில் தந்திருக்கிறார்.

கட்டுரைகள் தனித் தன்மையோடும் சிந்தனை கனத்தோடும், வாழ்க்கைப் பிரச்னைகளை ஆராய்ந்து இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடிய விதத்திலும் அமைந்துள்ளன.

பாவண்ணன் நல்ல தொடர்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதன் பிறகு, சுயசிந்தனையும் தன்மானமும் தன்னம்பிக்கையும் மெய்த்துணிவும் பெற்ற பத்திரிகை நிருபர் ஒருவரை கதாபாத்திரமாகக் கொண்ட தொடர் கதையை செ. யோகநாதன் எழுதிவருகிறார்.

விசேஷமான பேட்டிகளையும் ‘அரும்பு‘ வெளியிட்டுள்ளது. வலம்புரி ஜான், வல்லிக்கண்ணன், கோமல் சுவாமிநாதன், ஓவியர் ஜெயராஜ் போன்றவர்களின் பேட்டிகள் முக்கியமானவை.

தனித்தன்மையோடு வித்தியாசமான பேட்டிகளை வெளியிடும் எண்ணத்தோடு, முடிதிருத்தும் தொழிலாளி, நடைபாதைத் தொழிலாளி, சுமை தூக்குவோர் முதலியவர்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் பிரச்னைகளையும் கேட்டறிந்து நல்ல முறையில் எதார்த்தச் சித்திரங்களாகப் பிரசுரித்துள்ளது.

அமிர்தராஜ் பாராட்டப்பட வேண்டிய கதை, கவிதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

‘அரும்பு‘ வின் ஒவ்வொரு மாத அட்டைப் படமும் வித்தியாசமானவையாக அமைந்து பத்திரிகைக்கு ஒரு தனித்தன்மை அளித்துள்ளது.