பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

289


‘கடந்த இருபது ஆண்டுகளாக வந்துள்ள ‘மல்லிகை’ இதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டி ஆராய்ந்தால், இன்றைய தமிழ் இலக்கியம் மற்றும் திறனாய்வின் வளர்ச்சிக்கு மல்லிகை ஆற்றியுள்ள அருந்தொண்டு நன்கு விளங்கும். குறிப்பாக, திறனாய்வுத் துறையின் வளர்ச்சிக்கு ’மல்லிகை’ யின் வாயிலாகக் கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான் மற்றும் பல ஆய்வாளரது பங்களிப்பு சாலச் சிறந்ததாகும். இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக இவர்கள் நடத்திய கருத்துப் போராட்டமும், ஒப்பீட்டு முறையில் திறனாய்வை வளர்ப்பதில் இவர்கள் காட்டிய ஆர்வமும் போற்றத்தக்கன.

பேராசிரியர் நா. வானமாமலை மற்றும் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நட்புறவை வளர்ப்பதில் மல்லிகையின் வீறுமிக்க பணி குறிப்பிடத் தக்கதாகும்.

‘இந்திய இலக்கியத்தை மட்டுமின்றி, சோவியத் யூனியன் மற்றும் பிற சோஷலிச நாடுகளின் இலக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மல்லிகை எப்போதும் முன் நின்றுள்ளது.’ இது, தி. க. சி. யின் மதிப்பீடு.

இலங்கை எழுத்தாளர்களின், இளம்படைப்பாளிகளின் கதைகள், கட்டுரைகள், கவிதைகளை மல்லிகை வெளியிடுகிறது.

’விவாத மேடை’ என்ற பகுதி மூலம் இலக்கியப் போக்குகளும், பிரச்னைகளும் விரிவாக சர்ச்சிக்கப்பட்டுள்ளன.

டொமினிக் ஜீவா வருடத்துக்கு ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து, பரந்த அளவில் கற்றுப்பயணம் செய்து, எழுத்தாளர்கள் பெரும்பாலோரைச் சந்திக்கிறார். அவர்களோடு மனம்விட்டுப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து, தமிழ்நாட்டின் கலை, இலக்கியப் போக்குகள் பற்றி அறிந்து கொள்கிறார். தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் விமர்சனங்களையும் மல்லிகையில் எழுதுகிறார். தூண்டில் என்ற கேள்வி—பதில் பகுதி அவருடைய அபிப்பிராயங்கள், சிந்தனைகள், அனுபவக் குறிப்புகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி வெளியிடுகிற அரங்கமாக விளங்குகிறது.

இலங்கையின் பல பகுதிகளையும், அவற்றைச் சேர்ந்த கலை இலக்கியப் படைப்பாளிகளையும் கவுரவிக்கவும் அறிமுகப்படுத்தவும்