பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வல்லிக்கண்ணன்


ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் செல்வாக்கு பெற்றிருந்த காலம் அது. அவர் கம்பன் காவியத்தில் திருத்தங்கள் செய்து, கம்பர் தரும் ராமாயணம் என்ற புதிய பதிப்பை வெளியிட்ட சமயம். அதைக் கண்டித்து, ஐந்தாம் படை ரசிகர்கள் என்ற தலைப்புடன் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதினார் கலாமோகினி ஆசிரியர்.

யுத்த காலத்தில் 'ஐந்தாம் படை என்பது பிரசித்தமாக இருந்தது. ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் இருந்து கொண்டே உளவு சொல்லியும் நாச வேலைகள் செய்தும் எதிரிக்கு உதவிகள் புரிவார்கள்- இப்படி உள்ளே இருந்தபடி ஊறுகள் செய்வோர்- சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்பவர்கள்- ஐந்தாம் படையினர் ஆவர்.

அதேபோல், தமிழ் இலக்கியத்தை-கவிதைகளையும் காவியங்களையும்-ரசிப்பதாகப் பெயர் பண்ணி, அவற்றைச் சிதைத்து நாசவேலை செய்ய முற்படுவோரை ஐந்தாம் படை ரசிகர்கள் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

கலாமோகினி தான் தேர்ந்து கொண்ட பாதையில் துணிந்து செயல் புரிந்தது. நம்பிக்கை என்ற பலமும், கலை, கவிதை ஆகியவற்றின் மேல் உள்ள தன்னலமற்ற பற்றும்தான் இம்முயற்சியின் தளர்வற்ற போக்குக்கு உறுதுணைகள் ஆக விளங்கின. பொருளாதார பலம் வாய்க்காததால் கலாமோகினி சோதனைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது.

குறித்த தேதியில் பத்திரிகை வர முடியாத நெருக்கடி. இடையிடையே ஒரு இதழ் வராமலே போவது போன்ற குழப்பங்கள் கலா மோகினிக்கு அதன் இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளில் ஏற்பட்டன.

கலாமோகினி முதல் 13 இதழ்கள் 'டிம்மி சைஸில்' (ஆனந்த விகடன் அளவில்) வந்தன. 14-ம் இதழ் முதல் 'கிரவுன் சைஸ்.' (கொஞ்சம் சிறிய அளவு) கடைசி இதழ் வரை இந்த அளவு நீடித்தது.

'அரசியல் வேண்டாம்' என்று ஒதுக்கி வைத்த கலாமோகினி பின்னர் அரசியல் தலையங்கங்களும், அபிப்பிராயங்களும் வெளியிட முன்வந்தது. 'ஆய கலைகள்' என்ற தலைப்பில் இசை, நாட்டியம், நாடகம், சினிமா பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டது. புத்தக மதிப்புரையை எப்போதாவது பிரசுரித்தது. காம இலக்கியப் பிரசுரம் ஒன்றைக் கண்டித்து 'மதிப்புரை மறுப்பு' என்று ஒரு கட்டுரை எழுதியது.