பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

35


அபிப்பிராயங்களை அறிவித்தது. சமகாலத்திய சிறு பத்திரிகைகளுக்கு ஒரு முன்னோடியாகவும் அது இருந்தது என்றும் சொல்லலாம்.

1942-43-ல் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருந்த 'கலாமோகினி', அதைப் போலவே தங்கள் பத்திரிகையையும் தரமான மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகையாக மாற்ற வேண்டும் என்ற உந்துதலை வேறு சில பத்திரிகைக்காரர்களுக்கு ஏற்படுத்தியது. அப்படி ஒரு தூண்டுதலுக்கு உள்ளாகி தீவிர மறுமலர்ச்சி பெற்ற பத்திரிகைகளில் 'கிராம ஊழியன்’ முக்கியமானது.

‘கிராம ஊழியன்' திருச்சிராப்பள்ளிக்கு 28-மைல்கள் தள்ளி இருக்கும் துறையூர் என்ற சிற்றுாரிலிருந்து வெளிவந்தது.

ஆரம்பத்தில் அது அரசியல் வார ஏடு ஆகத்தான் பிரசுரமாயிற்று. அந்தக் காலத்தில் (1940 களில் திருச்சியிலிருந்து 'நகர தூதன்’ என்ற வாரப் பத்திரிகை செல்வாக்குடனும் பரபரப்பூட்டும் வகையிலும் வந்து கொண்டிருந்தது.

அக்காலத்திய ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) யின் பத்திரிகை அது. சுயமரியாதை இயக்க ஏடு. அதன் ஆசிரியர் திருமலைசாமி என்பவர் வேகமான, மிடுக்குள்ள, உயிர்ப்பும் உணர்ச்சியும் நிறைந்த உரைநடையில் எழுதக் கூடிய திறமை பெற்றிருந்தார். ‘பேனா நர்த்தனம்' என்ற பகுதி அப்பத்திரிகையின் விஷேச அம்சமாகத் திகழ்ந்தது. குத்தும் கிண்டல்களையும், சுளிர் சவுக்கடிகளையும், காரசாரமான கருத்துக்களையும் அவர் அந்தப் பகுதியில் அள்ளி வீசினார். காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் பிரமுகர்களும் அவரது எழுத்துக்களில் சிக்கி அவஸ்தைப்பட்டனர்.

'நகர தூத'னுக்கு ஒரு போட்டியாகவும் அதற்குப் பதில் அளிக்கும் சாதனமாகவும், காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிகையாகவும் திருச்சி மாவட்டக் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் ஒரு வார இதழை துவக்கினார்கள். அது கிராமப்புறத்திலிருந்து வந்ததால் கிராம ஊழியன் என்று பெயர் பெற்றது. பூர்ணம் பிள்ளை என்ற துறையூர் காங்கிரஸ்காரர் அதன் ஆசிரியரானார். ஊழியன் பிரஸ் என்ற அச்சகத்தில் அது அச்சிடப்பட்டது. பின்னர் லிமிடெட் ஸ்தாபனம் அமைக்கப்பட்டு பிரசும் பத்திரிகையும் அதன் நிர்வாகத்தில் இயங்கின.

சில மாதங்களில் ஆசிரியர் பூர்ணம் பிள்ளை மரணம் அடையவும், ‘கிராம ஊழியன்' அரசியல் ஏடு ஒரு புதிய ஆசிரியரைத் தேடியது. பத்திரிகைகள் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த திருலோக சீதாராம் அதன் ஆசிரியரானார்.