பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வல்லிக்கண்ணன்


திருவையாறு லோகநாத சீதாராம் விழுப்புரத்தில் தியாகி பத்திரிகையில் அனுபவம் பெற்றபின், 'ஆற்காடு தூதன்’, ‘பால பாரதம்' போன்ற பத்திரிகைகளைச் சொந்தத்தில் நடத்தி அனுபவம் பெற்று, துறையூர் வந்திருந்தார். அவர் கவிஞர். மகாகவி பாரதியின் பக்தர். வள்ளலார் பாடல்கள், பாரதி பாடல்கள் முதலியவற்றைத் தனி ரகமான குரலில் பாடிக் காட்டியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் அந்த வட்டாரத்தில் பிரபலமாகி வந்தவர். காங்கிரஸ் ஆதரவாளர்.

கிராம ஊழியன் பிரஸ் லிமிடெட்டின் காரியதரிசியாகப் பொறுப்பேற்றிருந்த அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் காந்தி பக்தர், பாரதி அபிமானி, இலக்கிய ரசிகர்.

‘கிராம ஊழியன்' அரசியல் ஏடு அ. வெ. ர. கி. நிர்வாக மேற்பார்வையில், திருலோக சீதாராமின் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்தது. சுற்று வட்டாரத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது.

தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு பொங்கி எழுந்த காலகட்டம். 1942-ல் பத்திரிகை சுதந்திரத்தை அதிகமாகப் பாதிக்கும் அளவில், அந்நாளைய பிரிட்டிஷ் அரசாங்கம், பலப் பல நடவடிக்கைகளை அமல் நடத்திய சமயம். அரசின் அந்தப் போக்கைக் கண்டனம் செய்து அகில இந்திய ரீதியில் பல பத்திரிகைகள் தங்கள் பிரசுரத்தை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தினமணி, பாரததேவி, நவயுகம், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃப்ரீபிரஸ் ஆகிய நாளிதழ்களும், சண்டே டைம்ஸ், ஹிந்துஸ்தான், கிராம ஊழியன் ஆகிய வாரப் பத்திரிகைகளும் அவ்விதம் எதிர்ப்பு காட்டின.

அப்போதுதான் திருச்சியில் 'கலாமோகினி' தோன்றி உற்சாகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அது திருலோக சீதாராம், அ. வெ. ர. கி. இருவர் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தியது. அவர்கள் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த ஆசைப்பட்டார்கள்.

உலக மகாயுத்தத்துக்குப் பிற்பட்ட காலம். காகிதத் தட்டுப்பாடும் கட்டுப்பாடும் இருந்த காலம். புதிய பத்திரிகைகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த காலம்.

எனவே, கிராம ஊழியன் பத்திரிகையையே இலக்கியப் பத்திரிகையாக மாற்ற அவர்கள் திட்டமிட்டார்கள்.

கு. ப. ராஜகோபாலன் சென்னையைத் துறந்து, கும்பகோணம் வந்து, அங்கே இலக்கிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவரை